ஹிந்துத்துவம்: ஓர் அறிவியல் கண்ணோட்டம்

கட்டுரையாசிரியர் பற்றி…

கே.எஸ். சுதர்ஸன்
ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர்.

மத்தியப்பிரதேச மாநிலம் ராய்ப்பூரில் 1932 ஜூன் 18- ல் பிறந்தார். 1953 – ல் தொலைதொடர்பு துறையில் பி.ஈ (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர். தனது வாழ்வை சமூகப்பணிக்காக அர்பணித்து 1954 ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுநேர ஊழியரானார்.

ராய்காட், சாகர், ரிவா ஆகிய பகுதிகளில் ஜில்லா ப்ரச்சாரக்காகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் மத்திய பாரதத்தின் ப்ராந்த ப்ரச்சாரக்கராகவும், 1969 முதல் அகிலபாரத சாரீரிக் ப்ரமுக், 1979 முதல் அகிலபாரத பௌத்திக் ப்ரமுக், 1990 முதல் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் ஆகிய பொறுப்புக்களை வகித்துள்ளார். 2000- ம் ஆண்டு முதல் அகிலபாரத தலைவராக பொறுப்பேற்று பாரத நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஸ்வயம் சேவகர்களுக்கு ஊக்கமும், வழிகாட்டுதலும் வழங்கி வருகிறார்.

பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சனைகளைப் பற்றி ஆழ்ந்த விஷயஞானம் கொண்டவர்.

ஹிந்தி, மராட்டி, பெங்காளி, ஆங்கில மொழிகளில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்தவர். அஸ் ஸாமி, ஒரியா, சம்ஸ்க்ருதம், குஜராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பேசவும் தெரிந்தவர்.

இங்கிலாந்து, ஹாலந்து, கென்யா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், அமெரிக்கா, கனடா, ட்ருனிடாட் போன்ற பல வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.


ஹிந்துத்துவம்: ஓர் அறிவியல் கண்ணோட்டம்

இது விஞ்ஞான யுகம் என்று பேசப்படுகிறது. எதையும் விஞ்ஞான உரைகல்லில் சோதித்து தரம் பார்க்கிறார்கள். ஹிந்து தர்மம் விஞ்ஞானபூர்வமானது என்கிற உண்மை நீறுபூத்த நெருப்பாக உள்ளது. சாம்பலை ஊதித்தள்ளி நமக்கு சத்திய தரிசனம் செய்து வைக்கிறார் ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் ஸ்ரீ கு.சீ. சுதர்ஸன். அவரது அகிலபாரத சுற்றுப்பயணத்தின்போது கல்கத்தா நகரில் அவர் நிகழ்த்திய பேருரையின் தமிழாக்கம் இது.


ஹிந்துத்துவம்: ஓர் அறிவியல் கண்ணோட்டம்

ஹிந்து தர்மம் எவ்வாறு விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளது என்பது பற்றி நான் கருத்துக் கூறு முன் ஹிந்து தர்மம் பற்றி வேண்டுமென்றே பரப்பப்பட்ட சில தப்பான கருத்துக்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஹிந்து தர்மத்தைப் பற்றிய குழப்பமெல்லாமே ‘இங்கிலீஷ் படிப்பு படித்தவர்களுக்குத்தான். ‘தர்மம்’ என்ற சம்ஸ்க்ருத சொல்லுக்கு சரியான ஆங்கிலச் சொல் கிடையாது என்பதுதான் இதற்குக் காரணம். இது என் கருத்து மட்டுமல்ல, அன்னி பெஸன்ட் அம்மையாரும், “ஆங்கில மொழியில் ‘தர்மம்’ என்னும் சொல்லுக்கு ஈடான சொல்லே இல்லை” என்று சொல்லியிருக்கிறார். ‘மதம்’ என்ற பொருள் தரும் பல சொற்கள் சம்ஸ்க்ருதத்தில் உண்டு. ‘சம்பிரதாயம்’, ‘உபாஸனா பத்ததி’ (வழிபாட்டு முறை), ‘பந்த்’ என்ற சொற்களே அவை. ஆனால் ‘தர்மம்’ என்னும் சொல் ‘மதம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டது.

இப்படியாக ‘தர்மம்’ மதமாகியது. அதனால் நாம் மதத்தை குறிக்க ‘தர்மம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் துவங்கினோம். இதன் விளைவாக, ‘ஐரோப்பாவில் மதத்தின் பேரால் கலகங்களும் போர்களும் நடத்தப்பட்டன அல்லவா, நம் நாட்டிலும் தர்மத்தின் பேரால் அதுபோலவே நடக்கலாம்’ என்று முடிவு கட்டிவிட்டோம். அதனால்தான் பாரத அரசியல் சாசனத்தை வடிவமைக்கும் போது “நம் நாடு தர்மநிரபேக்ஷமானது (தர்மம் சாராதது)” என்று குறிப்பிட்டு விட்டோம். ‘சம்ப்ரதாய நிரபேக்ஷ’ அல்லது ‘பந்த் நிரபேக்ஷ’ (மதசார்பற்ற) என்ற சொற்கள் பொருத்தமாக இருந்திருக்கும். நாம் நம்மை “தர்மநிரபேக்ஷ” என்று அறிவித்துக் கொண்ட கணமே நம் வாழ்வின் அடிப்படை கேள்விக் கிடமாகிவிடுகிறது. ஏனென்றால் தர்மம் நம் தேசத்தின் ஆன்மா என்று கருதுவோர் நாம். “தர்மம் நமது நாட்டின் உயிர் மூச்சு” என்றல்லவா சுவாமி விவேகானந்தர் முழங்கினார்? |

“மந்திரவாதிகளின் உயிர், பூதத்தின் உயிர் ஏதோ ஒரு பறவையிடம் இருக்கும் என்றும், அந்தப் பறவை பத்திரமாக இருக்கும் வரை, மந்திரவாதியை அல்லது பூதத்தை இந்த உலகில் எந்த சக்தியும் அழிக்க இயலாது என்றும் கதை சொல்லிக் கேட்டிருக்கிறோம். தேசங்களுக்கும் அதுபோலத்தான். தேசத்தின் உயிர்நாடி ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அடங்கியிருக்கிறது. அதில்தான் தேசத்தின் தேசியம் பொதிந்துள்ளது. அந்த விஷயத்தை

தீண்டாத வரை நாடு சிறந்து விளங்கும் என்பது பற்றி சந்தேகமில்லை. தேசியத்திற்கு தீங்கு விளைவிக்காத எந்த உரிமை பறிபோனாலும் நாடு அதைப்பற்றிக் கவலைப்படாது. ஆனால் தேசியத்தின் ஜீவநாடி போன்ற விஷயத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் தேசம் அதற்கு மிக பலமாக பதிலடி கொடுக்கும்.”

தர்மம் தான் நம் நாட்டின் ஜீவன், உயிர்த் துடிப்பு என்று சுவாமி விவேகானந்தர் அறிவித்தார். “நம் நாட்டவன் ஒருவனிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொள்ளுங்கள்; அவனை எட்டி உதையுங்கள்; என்ன சொல்லி வேண்டுமானாலும் திட்டுங்கள்; அவன் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை, தர்மத்தின் ஒரே ஒரு வாயிலை மட்டும் அகலத் திறந்து வைத்தீர்களானால் போதும் அவனுக்கு. ஒரு இந்திய அறிவாளி, ‘தர்மத்தை நாட்டின் ஆன்மாவாக கருதுவதால் என்ன பயன்? வேறு நாடுகளைப்போல் சமுதாய, அரசியல் சுதந்திரமே தேசத்தின் ஆன்மா என்று கூறினால் என்ன?’ என்று கேட்கிறார். நதி மலையிலிருந்து இறங்கி பல ஆயிரம் மைல் கடந்து வந்து விட்டது. அது திரும்பிப் போகுமா என்ன? இந்தப் பத்தாயிரம் ஆண்டுக்கால வரலாற்றில், தேசிய வாழ்க்கை வழிமாறிப் போயிருந்தது என்றால் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. தேசத்திற்கு ஒரு புதிய தன்மையை கற்பிக்க முயன்றோமென்றால் அழிவு நிச்சயம்”.

இந்த விஷயத்தில் பின்வருமாறு விளக்கமளித்தார் மகரிஷி அரவிந்தர்: “சனாதன தர்மம்தான் நமக்கு தேசியம். இந்த ஹிந்து நாடு சனாதன தர்மத்துடன் தான் பிறந்தது, அதனுடனேயே செல்கிறது, அதனுடன் தான் வளர்கிறது. சனாதன தர்மம் பலமிழந்தால் ஹிந்து ராஷ்டிரமும் பலமிழக்கிறது. சனாதன தர்மம் அழிய முடியுமென்றால் ஹிந்து தர்மமும் அதனுடனேயே அழிந்து போகும். சனாதன தர்மம் அதாவது தேசியம் – இதுதான் நான் உங்களுக்கு அளிக்கும் சேதி”. நம் ரிஷிகளும், முனிவர்களும் தர்மம் என்பதை விளக்கியது இவ்வாறுதான். எனவே, தர்மத்தை மதம் என்று குழப்பிக் கொள்ளுவது இமாலயத் தவறு. இந்த விஷயத்தை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

அப்படியானால் தர்மத்தை வரையறுப்பது எப்படி? தர்மம் என்றால் இதுதான் என்று வல்லடியாக விளக்கமளிக்க இயலாது. ஏனென்றால், விரிவான பொருள் தரும் எந்த ஒரு சொல்லுக்கும் அச்சுப்பதிப்பது போன்று வரையறை தந்து அந்தச் சொல்லை முடக்கிவிடமுடியாது. அவ்வாறு வரையறுக்கப் பார்த்தால் அந்தச் சொல்லின் பொருள் மிகைப்படுத்தலாக அல்லது அரைகுறையாக ஆகி விடுகிறது. கடவுள் என்றால் இது தான் என்று எதையும் அறுதியிட்டுக் கூற இயலாதல்லவா, அதுபோலத்தான் தர்மமும். அதை ஒரு அச்சுக்குள் ஒடுக்க முடியாது. இருந்தாலும், நம் முன்னோர் தர்மத்திற்கு விரிவான ஒரு பொருளை கொடுக்க முயன்றிருக்கிறார்கள்:

“தாரணாத் தர்ம இத்யாஹு:

தர்மோ தாரயதே ப்ரஜா:

யஸ்மாத் தாரண சம்யுக்த:

ஸதர்ம தி மன்யதே”

எது தாங்குகிறதோ (ஆதாரமானது), எது ஒன்றுபடுத்துகிறதோ அதுவே தர்மம் என்பது இதன் பொருள். தர்மம் என்ற சொல் தாங்குதல், ஒன்று படுத்துதல் என்று இருபொருட்களை கொண்ட “த்ரு’ என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவானது. அதாவது சமுதாயத்தை ஒன்றுபடுத்தும் தன்மை கொண்ட எல்லாமே தர்மம்; உலகின் பல கூறுகளையும் ஒன்று படுத்தும் எல்லாமே தர்மம். பொதுவாக இந்த உலகில் தனிநபர், சமுதாயம், படைப்பு, பரம்பொருள் என்ற நான்கு நிலைகள் உள்ளன.

சமுதாயம் என்பது தனிநபர்களின் கூட்டு மட்டுமல்ல. அது ஜீவனுள்ளது. அதற்கே உரிய தனித்தன்மை, அடையாளம் ஆகியவை கொண்டது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அலாதியான உள்ளார்ந்த தன்மை உண்டு. அதில் வாழும் தனிநபர்களின் இயல்பில் அந்த சமுதாயத்தின் தன்மை படிகிறது. அந்த வகையில் சமுதாயம் தனிநபர்களின் கூட்டம் மட்டுமல்ல, தனியே ஜீவனுள்ளது. தனிநபர், சமுதாயம் இவற்றை அடுத்து வரும் படைப்பு மூன்றாவது நிலை. பரம்பொருள் கடைசி நிலை.

இந்த நான்கு நிலைகளின் நடுவே சுமுகமான சச்சரவில்லாத, ஒருங்கிணைக்கப்பட்ட உறவுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட எல்லா நெறிமுறைகளும், தத்துவங்களும் ‘தர்மம்’ என்பதன் கீழ் வரும். தனிநபருக்கும் சமுதாயத்திற்கும் இணக்கமான, ஒருங்கிணைந்த உறவு ஏற்படுத்தும் சட்டத்திட்டங்களும் ஏற்பாடுகளும் ‘கர்த்தவ்ய தர்மம்’ (விதிக்கப்பட்ட கடமைகள்) என்று பெரியோர்களால் வடிவமைக்கப்பட்டன.

குடும்பம் என்பது சமுதாயத்தின் குறுவடிவம். இணக்கத்துடன் சச்சரவில்லாமல் பரஸ்பர ஒத்துழைப்பினால் அமைதியாக குடும்பம் நடக்கவேண்டுமென்றால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தன் கடமைகளை செவ்வனே செய்தல் வேண்டும். குடும்பத்தில் தாய்க்கு, தந்தைக்கு, அண்ணனுக்கு, தங்கைக்கு, கணவனுக்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு என அவரவர் கடமை உண்டு. இதையெல்லாம்தான் மாத்ருதர்மம் (தாயின் கடமைகள்), பித்ருதர்மம் (தந்தையின் கடமைகள்), சந்தான தர்மம் (பிள்ளைகளின் கடமைகள்) என்றெல்லாம் அழைக்கிறார்கள். இங்கே தர்மம் என்ற சொல் கடமை என்பதைக் குறிக்கிறது.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் நாம் நல்ல நட்போடு இருக்க வேண்டுமென்றால் ப்ரதிவேஷி தர்மத்தை (பக்கத்து வீட்டார் கடமை) கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நல்ல அண்டை வீட்டாராக, அவரவர் தங்கள் கடமையை, தங்கள் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும். பக்கத்து வீட்டில் நடக்கும் நல்ல சேதிகளை பிறருக்கு தெரிவித்தல், நல்லது அல்லாதவற்றை பற்றி பேசாதிருத்தல் இவை அண்டைவீட்டாரின் தர்மம். உதாரணமாக, என் பக்கத்து வீட்டில் கணவனும் மனைவியும் சண்டைபோட்டுக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். மறுநாள் நாலுபேர் மத்தியில், ‘நண்பர்களே… நேற்று பொழுது போனதே தெரியவில்லை. என் பக்கத்து வீட்டில் கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டார்கள். அடித்துக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது…’ என்று வம்பளந்தால் எனக்கு நானே குழிபறித்தது போல்தானே ஆகும்? அந்தக் கணவன், மனைவி இருவரிடமும் நன்றாக உதைபடுவதற்கும் சாத்தியக்கூறு உண்டு. மாறாக நேற்று உன் பக்கத்து வீட்டில் என்ன நடந்தது என்று யாராவது கேட்டாலும் நான், ‘ஒன்றுமில்லை. இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம். என் பக்கத்து வீட்டார் மிக நல்லவர்கள்’ என்று நான் கூறினால், அண்டை வீட்டார் தர்மத்தை நான் கடைப்பிடித்தவனாவேன்.

இதேபோல் ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்கும் சுமூகமான உறவு நிலவ வேண்டுமென்றால், ஆளுவோர் ராஜதர்மத்தையும் மக்கள் பிரஜாதர்மத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இப்படித்தான் ஆசிரியர் – மாணவர், எஜமானன் – வேலையாள் ஆகியோரும் அவரவர் தர்மத்தை கடமையை சிறப்பாகச் செய்யவேண்டும். இப்படி எல்லோரும் தமது தர்மங்களை சரியாக செய்வதானால் தனி நபருக்கும் சமுதாயத்திற்கும் நடுவே மோதல்கள் தடுக்கப்படுகின்றன. இவ்வாறு, கர்த்தவ்ய தர்மம் (அவரவர் கடமை புரிதல்) என்பது தர்மத்தின் ஒரு அம்சம்.

நம் சரீரம் படைப்பில் இயற்கை தந்த பரிசு. எவருமே தன் உடல் நன்றாக செயல்படவேண்டும் என்று தான் விரும்புவார்.

அதனால் நாம் படைப்புடன் (சிருஷ்டி) சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுகாதார கோட்பாடுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது எந்தப் பருவத்தில் என்ன உண்ணவேண்டும், எதைப் பருக வேண்டும். எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பது பற்றி சில கோட்பாடுகள் உண்டு. இவை உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற இயற்றப்பட்டவை. நாம் இந்த கோட்பாடுகளுக்கு உட்படாவிட்டால், நம் பழக்க வழக்கங்கள் இந்த கோட்பாடுகளுக்கு நேர்மாறாக இருந்தால், நாம் துன்பப்படுவது நிச்சயம். இன்றைய நம்முடைய வாழ்க்கையில் ஓட்டம் அதிகரித்து ஓய்வற்ற தாகி விட்டது, மிகவும் வேகமான வாழ்க்கை என்று இதைத்தான் கூறுவார்கள். இந்த மாதிரியான வாழ்க்கையால் பல்வேறு பிரச்சினைகள் முளைக்கின்றன. நகரங்களில், பெருநகரங்களில் வசிக்கிறவர்களுக்கு இது தெரிந்த விஷயம்தான். எனவே இயற்கையுடன் (படைப்புடன்) நாம் இணக்கமாக வாழ வேண்டும் என்றால் இயற்கையின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும். இதைத்தான் நம் முன்னோர்கள் ஆசார தர்மம் (இயற்கையுடன் ஒன்றிவாழ்தல்) என்று கூறினார்கள். “ஆசார: பிரதமோ தர்ம:” (சரியான பழக்க வழக்கம்தான் முதல் தர்மம்) என்று தெளிவாகவே எடுத்துக் கூறினார்கள். ஏன்? இதை நன்றாக செயல்படுத்தினால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சரீரம் ஆத்யம் கலு தர்மசாதனம். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். எந்தவித செயல் செய்யவும் உடல் ஆரோக்கியம் மிக அவசியம். அதாவது ஆசார தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அடுத்து, சமுதாயம் – இயற்கை உறவு. சமுதாயம் இயற்கையால்தான் வாழ்கிறது. இயற்கையானது சமுதாயத்தின் வாழ்விற்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்கிற வளங்களை வழங்கு கிறது. அதனால் சமுதாயம், இயற்கை இவற்றுக்கிடையே ஒரு இசைவிணக்கமான உறவு அவசியம். இதைத்தான் சிருஷ்டி தர்மம் (சுற்றுச்சூழல் சமன்பாடு) என்று கூறுவார்கள். இயற்கையில் மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள், புழு, பூச்சிகள், மனிதர்கள் எல்லாமே அடங்கும். இவைகளுக்கிடையே ஜீவனுள்ள ஒரு இணைப்பு உள்ளது. இதைத்தான் சுற்றுச்சூழல் சமன்பாடு என்பார்கள். இந்த சமன்பாட்டு நிலை பேணிக் காக்கப்படுமானால் வாழ்க்கை சீராகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். உலகில் காணப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்ன? எங்கோ ஒரு இடத்தில் ஓசோன் படலம் சன்னமாகிமிட்டது, அதில் ஓட்டையும் ஏற்பட்டுவிட்டது. இந்தப் படலம் அழிந்து போனால் (கலைக்கப்பட்டால்) சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமண்டலத்திற்குள் பிரவேசிக்கும். நம் உடல் நலத்தை அது பாதிக்கும். நம் சருமம் பாதிக்கப்படும். அதனால் தோல் புற்றுநோய் ஏற்பட்டு மனித குலமே அழிந்துவிடும். இது பற்றி விஞ்ஞானிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெருநகரங்களில் சுற்றுச்சூழல் மாசு கவலை அளிக்கக்கூடியதாக, கட்டுக்கடங்காமல் போய்விட்டது. டாக்டர் ட்ரேஹன் தில்லியின் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் (கார்டியாக் சர்ஜன்). ஒரு வாடிக்கையாளர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்க வந்திருந்தார். அங்கே அவர் கூறிய ஒரு விஷயம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. “நான் பல நோயாளிகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஒரு விஷயம் எண் கண்ணில் படுகிறது. கிராமப்புறத்திலிருந்து வரும் நோயாளிகளின் இருதயம் சிவப்பாகவும், தில்லி நகரில் வசிப்பவர்களின் இதயம் கருப்பாகவும் இருக்கிறது” என்றார் அவர். பெரிய நகரங்களில் மாசு அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை இந்த உதாரணம் மிகத்தெளிவாகக் காட்டுகிறது. சுற்றுச் சூழல் மாசு மற்றும் இதுபோன்ற பல பிரச்சினைகள் அதிகரித்த வண்ணம் இருப்பதற்குக் காரணம் செயற்கையான, இயற்கைக்கு ஒவ்வாத நம் வாழ்க்கை முறைதான்.

இயற்கை வளங்கள் வேகமாக வற்றி வருகின்றன. வேகமாக குறைந்து வரும் இயற்கை வளங்களையும் இயற்கையின் நானாவித இயல்பையும் (பயோ டைவர்ஸிடி) காப்பாற்றத் தவறினால் மனித குலத்திற்கு ஏற்படும் நெருக்கடிகள் பற்றி மக்களுக்கு இப்போதே மிகவும் கவலை உண்டாகியிருக்கிறது. இது பற்றி சிந்திக்க ‘பூமி மாநாடு’ ரியோடிஜெனீரோ நகரத்தில் நடத்தப்பட்டது. இதே போன்ற மாநாடு திரும்பவும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. இது இயற்கைக்கும் மனித சமுதாயத்திற்கும் நடுவே இருக்க வேண்டிய இசைவிணக்கமான பிணைப்பின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

கடந்த வருடம் தென்னாப்பிரிக்கா, ஜொஹானஸ்பர்கில் நடந்த பூமி மாநாட்டில் தட்பவெட்பநிலை மாற்றம் பற்றிய கியோடோ நெறிமுறை விஷயத்தில் வெளிநடப்பு செய்த அமெரிக்காவை வளரும் நாடுகள் கடுமையாக கண்டித்தன. கியோடோ நெறிமுறை செயல்படுத்தப்பட்டால் மாசு காரணமாக அதிகரித்து வரும் பூமிப்பந்தின் வெப்பம் கட்டுப்படுத்தப்படும்.

இதையெல்லாம் நாம் செயல்படுத்தவேண்டும் என்றால், நம் அனைவருக்கும் கடவுள் என்ற நான்காவது (முதல் மூன்று : தனி மனிதன், சமுதாயம், இயற்கை) அம்சம் உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதன்மூலம் சமன்பாட்டைக் கட்டிக்காக்க முடியும். சமன்பாடு காக்கப்படவில்லை என்றால் மேற்கத்திய முறையில் அமைந்த சிந்தனாமுறை தான் அதற்குக் காரணம். மேற்கத்திய நாடுகள் கிறிஸ்தவ சிந்தனா முறையால் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது நாம் அறிந்தது தான். கடந்த 1,500 வருடங்களாக தடையின்றி கிறிஸ்தவ சிந்தனாமுறையால் அவை ஆளப்பட்டு வருகின்றன.

கிறிஸ்தவ நம்பிக்கைகளில் முக்கியமானது இது: மனிதன் செய்த முதல் பாவத்தால் கடவுள் கோபமடைந்தார். இதனால் ஆதாமையும், ஏவாளையும் சுவர்க்கத்திலிருந்து வெளியே தள்ளினார். நீங்கள் இந்த பூமியில் வாழ்க்கை நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்படு வீர்கள் என்றும் சபித்தார். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சுவர்க்கத்தில், ஈடன் தோட்டத்தின் பழங்களில், அறிவு என்னும் பழத்தையும் வாழ்க்கை என்னும் பழத்தையும் தவிர அனைத்துக் கனிகளையும் சுவைக்க சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. இருவரும் மிகவும் சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒருநாள் சாத்தான், பாம்பு உருவில் வந்து ஏவாளிடம் வாழக்கை எப்படியிருக்கிறது? சந்தோஷமாக இருக்கிறதா? என்று கேட்டான். ஆம் என்றாள் ஏவாள். இங்குள்ள அனைத்துப் பழங்களையும் சுவைத்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு, ஆம், அனைத்தையும் சுவைத்தேன் என்றாள். அந்த இருபழங்களையும் உண்டீர்களா என்று சாத்தான் கேட்க, ஏவாள், அந்த இருபழங்களையும் உண்ணவேண்டாம் என்று கடவுள் தடைவிதித்துள்ளார் என்றாள். கடவுள் உங்களை சோதித்துப் பார்க்கிறார். இங்குள்ள அனைத்துப் பழங்களில் அந்த இரண்டு பழங்கள் தான் சிறந்த சுவை உள்ளவை. அதை ஒருமுறை உண்டு பாருங்கள், வேறு அனைத்தையும் மறந்து விடு வீர்கள் என்றான் சாத்தான். ஆதாமுக்கும் எவாளுக்கும் கடவுள் சொல்லை மீறிச்செல்ல விருப்பம் இருக்கவில்லை. சாத்தான் மீண்டும் கூறினான்: பாருங்கள், கடவுள் உங்கள் தைரியத்தை தான் சோதித்துப் பார்க்கிறார். பழத்தை உண்ணுங்கள். கடவுளே உங்களுக்கு உதவுவார் என்றான்.

ஏவாளும் சாத்தான் பேச்சைக் கேட்டு பழத்தை உண்டு ஆதாமுக்கும் கொடுத்தாள் என்று கூறப்படுகிறது. பழத்தை உண்ட உடனேயே தாங்கள் இருவரும் வேறுபட்டிருப்பதையும் ஆண் பெண் எனும் பேதத்தையும் உணர்ந்தார்கள். இதுநாள்வரை இருவர் மத்தியில் ஆண் பெண் என்ற பேதமோ அதனால் ஏற்படும் மோகமோ இருக்கவில்லை. ஆனால் இப்போது வேறுபாட்டை உணர்ந்தவுடன், தாங்கள் ஆடையின்றி இருப்பது தெரிந்து வெட்கமடைந்தார்கள். அதனால் தங்கள் உடல்களை இலை தழைகளால் மறைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். இந்நேரத்தில் கடவுள் வரும் காலடிச் சப்தம் கேட்டது. அவர்கள் தங்களை புதரில் மறைத்துக் கொண்டார்கள். கடவுள் அவர்களை காணாமல் வியப்படைந்தார். ஆதாம்! ஏவாள்! எங்கு இருக்கிறீர்கள்? என்று கேட்டார். நாங்கள் இங்கு உள்ளோம் என்று இருவரும் பதிலளித்தார்கள். அங்கு என்ன செய்கிறீர்கள்? என்று இறைவன் கேட்டதற்கு, உங்கள் முன் வருவதற்கு வெட்கமாக இருக்கிறது என்றார்கள். வெட்கமா? ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்த கடவுள், ஆதாமையும் ஏவாளையும் தன் முன்னே வருமாறு ஆணையிட்டார். அவர்களும் கடவுள் முன் வந்தார்கள். இலை தழைகளால் உடம்பை மறைத்து கொண்ட அவர்களை இறைவன் கண்டார். என்ன தவறு நேர்ந்தது என்று புரிந்துகொண்ட கடவுள் அவர்களை ஏசினார்: என் ஆணையை ஏன் மீறினீர்கள்? இதற்காக நீங்கள் இருவரும் தண்டிக்கப்படுவீர்கள். நான் உங்களை பூமிக்கு அனுப்புகிறேன். இதுவரை ஒரு முயற்சியும் இல்லாமல் வேண்டியது அனைத்தும் இந்த சுவர்க்கத்தில் உங்களுக்குக் கிடைத்து வந்தது. ஆனால் பூமியிலோ எந்த பொருளானாலும், அதை கடும் உழைப்பினால் மட்டுமே பெறுவீர்கள் – இவ்வாறு அவர்களை தண்டித்து பூமிக்கு அனுப்பினார் கடவுள்.

அதாவது இறைவன் மனிதனை இந்த பூமியில் உள்ள அனைத்தையும் அனுபவிக்கத்தான் அனுப்பியுள்ளான். பூமியிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற மனிதனுக்கு உரிமை உண்டு என்பது கிறிஸ்தவ நம்பிக்கை . மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள், புழு, பூச்சி போன்ற அனைத்துமே மனிதனின் சுகபோகத்திற்காகத்தான். அவர்களுக்கு இன்னொரு நம்பிக்கையும் உள்ளது. மனிதனைத் தவிர பிற அனைத்து பொருட்களும் ஜடங்கள், உயிரற்றவை. உணர்ச்சி இல்லாதவை. இன்னும் சொல்லப்போனால் பெண்களும் கூட உணர்ச்சி அற்றவர்கள்தான் ஆண்கள் மட்டுமே உணர்ச்சியுள்ளவர்கள். பெண்கள் ஆண்களுக்குப் பிறகு தான் பிறந்தார்கள். ஆதாம் சுவர்க்கத்தில் தன் தனிமை உணர்ந்து கடவுளிடம், இறைவா: நான் இங்கு தனியாக இருக்கிறேன். என் நேரத்தை எப்படி செலவிடுவது என்றே தெரியவில்லை. எனக்கு ஒரு துணையை கொடுங்கள் என்று கேட்டான். கடவுளும் ஆதாமின் ஒரு விலா எலும்பை ஒடித்து எடுத்து காற்றை ஊதினார், உடனே ஏவாள் தோன்றினாள். விலா எலும்புப் பகுதியிலிருந்து தோன்றியதால் ஏவாள் ஆன்மா அற்றவள் ஆனாள். ஐரோப்பா கண்டத்தில் நூறு, நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் கூட பெண்கள் ஈவிரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். சூனியக்காரிகள் என்று பல பெண்கள் பட்டம் சூட்டப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

சமீபத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது. அப்போது பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. மேல் சபையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தச் சட்டம் பற்றி காண்டர்பரி ஆர்ச் பிஷப்பிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அவர் கூறிய முடிவு இதுதான்: பைபிள் கூறுவது என்னவென்றால், மனிதனைத் தவிர வேறு எந்த பிராணிக்கும் ஆன்மா இல்லை. அதனால் அவைகளை கொல்வது பாவமாகாது. இந்த தைரியத்தில்தான் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு மனிதனைத்தவிர வேறு எல்லா பிராணிகளையும் கொல்லும் உரிமை இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.

விஞ்ஞான யுகம் மேற்கத்திய நாடுகளில் தொடங்கியது. ஆரம்பத்தில் விஞ்ஞான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முயற்சி நடந்தது. கலீலியோ, சூரியன் ஒரே இடத்தில் ஸ்திரமாக உள்ளது. பூமிதான் அதைச்சுற்றி வருகிறது என்று கூறிய போது அது கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஏனென்றால் அது பைபிள் உபதேசங்களுக்கு விரோதமாக இருந்தது. கலீலியோ சிறையில் தள்ளப்பட்டார். தொலைநோக்கி (telescope) மூலம் கலீலியோ தான் கூறியதை நிரூபித்ததால், அவருடைய கருத்தை பலர் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள். இதற்கிடையில் விஞ்ஞானிகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்தன. விஞ்ஞானி ப்ரூனோ எரித்துக் கொல்லப்பட்டார். ஆனாலும் மக்களின் மனதில் எதையும் ஆராய்ந்து தெளியும் போக்கு வளரத் தொடங்கியிருந்தது. கிறி ஸ் தவம் மனிதனின் யோசிக்கும் திறனையே முடக்கி வைத்திருந்தது. இந்த மதம் பைபிளில் எழுதப்பட்டதுதான் பரம உண்மை என்ற நம்பிக்கையில் நிறுவப்பட்டது. ‘விஞ்ஞான முடிவுகளை ஏற்பீர்களா அல்லது பூமி ஸ்திரமானது, சூரியன்தான் அதைச் சுற்றி வருகிறது என்னும் பைபிள் கூற்றை ஏற்பீர்களா?’ என்று கேட்கப்பட்டபோது, அன்னை தெரஸா கூட நான் பைபிள் கூறுவதையே ஏற்பேன் என்று கூறினார். இப்படி விஞ்ஞானத்திற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. விஞ்ஞானம் தர்க்க ரீதியில் அமைந்திருந்தமையால் மக்கள் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்ளத் துவங்கினார்கள். விஞ்ஞான முன்னேற்றத்தால் கிறிஸ்தவ மதம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கிறிஸ்தவத்தின் பிடி தளர்ந்தது. விஞ்ஞானம் முன்னேறியது. பல சிறந்த விஞ்ஞானிகள் தோன்றினார்கள் என்பது பற்றி சந்தேகமில்லை. இருந்தாலும் அவர்களில் இருவர் குறிப்பிடத்தகவர்கள். ரீனீ தேகார்தே என்பவர் முதலாமவர். பிரான்ஸ் நாட்டு கணித மேதையான அவர் பகுத்தறியும் முறையை (Reduction Approach) அறிமுகப்படுத்தினார். பகுத்தறியும் முறையில், சோதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் சிறிசிறு பிரிவுகளாக பகுத்து அவற்றை முழுமையாக ஆராய வேண்டும். பிரிக்கப்பட்ட எல்லா பகுதிகளையும் பற்றி முழு விவரங்கள் ஆராயப்பட்டு திரட்டபட்ட பின் அவற்றை ஒன்றுபடுத்தினால், அது பற்றி முழுமையான வடிவத்தை நம்மால் பெற முடியும். இது ரீனி கண்ட முறை.

இரண்டாமவர் நியூட்டன். இந்த பிரபஞ்சமே சிறுசிறு உறுப்புகள் கொண்ட ஒரு பெரிய இயந்திரம் என்று அவர் கூறினார். அந்த சிறு பாகங்கள் செயல்படும் முறையை ஆராய்ந்து அவைகளின் சித்தாந்தத்தை நாம் அறிந்து கொண்டால் இந்த பிரபஞ்சத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றார். விஞ்ஞான வளர்ச்சியில் இந்த இரு சித்தாந்தங்களின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. சைமன் லாப்லாஸ் என்பவர் நியூட்டனின் Law of Motion and Law of Mechanics என்ற இரு சித்தாந்தங்களையும் ஆராய்ந்து அவற்றில் தான் கண்ட குறைபாடுகளைக் களைந்து, தன்னுடைய ஆய்வு முடிவை நெப்போலியனிடம் அனுப்பி வைத்தார். அதை படித்த நெப்போலியன் ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஒரு இடத்தில் கூட கடவுள் பற்றி குறிப்பிடவில்லையே என்று கேட்டார். அப்படியொரு விஷயத்தை ஏற்க வேண்டிய அவசியத்தை தான் உணரவில்லை என்று லாப்லாஸ் பதிலளித்தார். இந்த பிரபஞ்சமே ஒரு இயந்திரம் என்றால், அது சில கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிறது என்றால், கடவுள் ஏன்? என்று அவர் வினவினார். இதன் விளைவாக அவருக்கு அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் முரட்டுப் பிடிவாதத்துடன் தாங்களே இந்த பிரபஞ்சத்தின் செயல்பாட்டுக்குக் காரணமான அனைத்து சித்தாந்தங்களையும் கண்டு பிடித்து உலகையே ஆள வல்லவர்கள் என்ற போக்கில் போனார்கள். கடவுள் என்ற ஒருவர் இருந்தால் கூட அவர் தங்களுடைய பரிசோதனைச் சாலையின் சோதனைக் குழாயில் வந்து தான் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய்விட்டார்கள்.

இதன் விளைவாக விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்திலிருந்து விலக ஆரம்பித்தது. ஆனால், சிறு சிறு விஷயங்களின் ஆழ்ந்த ஆராய்ச்சிகளால் புதுப்புது கண்டு பிடிப்புகள் தடையில்லாத தொடர்ச்சியாய் வெளிவரத் துவங்கின. விஞ்ஞானம் தலைதெறிக்கும் வேகத்தில் முன்னேறத் தொடங்கியது. பகுத்தறிவின் விளைவால் பிறந்ததனாலும், தர்க்கரீதியில் விளக்கப்படமுடியும் என்பதாலும் விஞ்ஞானம் வரவேற்பையும் மதிப்பையும் பெறத் தொடங்கியது. விஞ்ஞானிகள் தங்களை விசேஷ பிறவிகள் என்று எண்ணினார்கள். விஞ்ஞானம் என்றால் திட்டவட்டமான தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார்கள். எதெல்லாம் எடைபோட்டுப் பார்க்க முடியுமோ, அளக்க முடியுமோ, எதையெல்லாம் கணிதக் கலைச்சொற்களால் குறிப்பிட முடியுமோ அவைதான் விஞ்ஞான ரீதியில் அமைந்தவை என்றார்கள்.

விஞ்ஞானம் முன்னேற முன்னேற இயற்கையை உறிஞ்ச புதிய கண்டுபிடிப்புகளும் கருவிகளும் முளைத்தன. இயற்கை வளங்கள் என்றுமே அழியாதவை, அள்ள அள்ளக் குறையாதவை என்று நினைத்து விட்டார்கள். ஆடம்பரத்திற்கான, சுகபோகத்திற்கான கருவிகள் பெருகப்பெருக, மனிதன் தர்மத்திலிருந்தும் கடவுளிடமிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்தான். இந்த போக்கினால் அறிவியல் பூர்வமானவை என்று கூறப்படும் பல சிந்தனாமுறைகள் தோன்றத் துவங்கின. மேற்கத்திய பொருளியலின் தந்தை என்று கூறப்படும் ஆடம் ஸ்மித், “நல்லது எதையும் செய்ய முயற்சி செய்யாதீர்கள், சுயலாபத்திற்காக செயல்படுங்கள். அதன் பக்க விளைவாக நல்லது நடக்கட்டும்” என்றார். இருபதாம் நூற்றாண்டில் கீன்ஸ் என்றும் இன்னொரு பொருளியல் அறிஞர் இருந்தார். 1930களில் மிகவும் பிரபலமடைந்தார். கீன்ஸ் கூறுவார்: “இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் நல்லதை கெட்டது என்றும் கெட்டதை நல்லது என்றும் நம்புவோம். பேராசை, பொறாமை, அபகரித்தல் போன்ற குணங்களை சிறிது காலம் தெய்வீக குணங்களாக கருதுவோம். இந்த குணங்களால் தான் ஏழ்மை என்னும் இருட்டு குகையிலிருந்து வெளி வந்து ஒளியைக் காண முடியும்”. இது போன்ற சித்தாந்தங்கள் பொருளியலின் அடிப்படையாகுமானால் மனிதனின் சுயநலத்துக்கு தூபம் போடுவதைத்தவிர வேறு எதையாவது செய்ய முடியுமா?

விஞ்ஞானிகளால் இன்னொரு போக்கிற்கும் ஊட்டம் கிடைத்தது. ‘மனிதன் இயற்கைக்கு உட்பட்டவன் அல்ல, அவன் தான் இயற்கையின் எஜமானன். புதுப்புது கருவிகள், சிறந்து செயல்படக் கூடிய இயந்திரங்கள் இயற்கையை இன்னும் அதிக வேகத்துடன் உறிஞ்ச வழிவகுத்தன. ‘காலம்’ என்பது பிரவாகம் போன்றது. அது திரும்பிச் சொல்லாது. ‘வெளி’ (Space) என்பது ஒரே சீரான பொருள்’ என்றார்கள்.

இந்தத் தவறான அணுகு முறையின் தீமையான விளைவுகள் சீக்கிரமே வெளிவரத் துவங்கின. இயற்கை வளங்கள் வேகமாக வற்றிப்போக ஆரம்பித்தன. சுற்றுச்சூழலும் அதே வேகத்துடன் மாசடையத் துவங்கியது. சமுதாயத்திலிருந்து நன்னடத்தை, தர்ம சிந்தனை போன்ற குணங்கள் மறையத் தொடங்கியது மூன்றாவது தீயவிளைவு. விஞ்ஞானத் துறையில் மிகவும் முன்னேறிய அதிக உலகாயதப் பொருட்களை அடைந்த நாடுகள்தான் நடத்தைக் கேடு, கட்டுப்பாடு இன்மை போன்ற சமுதாயப் பிரச்சினைகளில் சிக்கி மிகவும் அவதிப்படுகின்றன. இந்நாடுகளில் மனித உறவுகள் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன. அது அமெரிக்காவாகட்டும், இங்கிலாந்து ஆகட்டும், ஜெர்மனியாகட்டும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவு மிகவும் சீர்குலைந்துள்ளது. சுமுகத்தன்மை என்பதே காணக்கிடைக்காததாகி விட்டது. குடும்பங்கள் சிதறி விட்டன. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே உறவு கசந்து போக ஆரம்பித்தது. பாரதத்தில் இது போன்ற நிலைமையை கற்பனை செய்யக் கூட நம்மால் முடியாது. என் அத்தை (தாய்மாமனின் மனைவியார்) தன் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் என்னிடம் ஒரு சுவையான சம்பவம் சொன்னார். ஒருமுறை அவர் தன் வீட்டருகில் இருக்கும் நண்பரின் வீட்டில் அமர்ந்திருந்தார். மதிய உணவு வேளை அது. அப்போது அந்த வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் ஒரு கார் வந்து நின்றது. அது தன் மகளாகத்தால் இருக்கும் என்று என் அத்தையின் அமெரிக்க நண்பர் கூறினார். அதற்கு என் அத்தை, நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள். உன் மகளுடைய மதிய உணவிற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல, அமெரிக்க நண்பரோ, எதற்காக உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்? என்றார். அவள் உன்னுடைய மகள் தானே, மூன்று நான்கு மணிநேரம் கார் ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறார். இது மதிய நேரம். இங்கே உணவு உட்கொள்ள மாட்டாளா? என்றார் என் அத்தை. அந்த அமெரிக்கத் தாய், அவள் இங்கே சாப்பிட வருவேன் என்று முன்னமே தெரியப்படுத்த வில்லையே? அவளுடைய மதிய உணவைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என்றாராம். காரை நிறுத்திவிட்டு அவருடைய மகள் உள்ளே வந்தாள். ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் தாயும் மகளும். ஒருமுறை கூட மதிய உணவு பற்றி அவளுடைய தாய் பேசவில்லை. மகளும் சாப்பிடாமலேயே புறப்பட்டுப் போனாள்.

1989ல் நான் கனடா நாட்டிற்குப் போயிருந்தேன். டோரோன்டோ நகரத்தில் ஒரு சிறுவனுக்கு பிறந்த நாள் வந்தது. அவன் அம்மாவிடம், என் பிறந்த நாள் விழாவிற்கு என் நண்பர்களை அழைக்கட்டுமா? என்று கேட்டான். ஆறு பேரை மட்டும் கூப்பிடு என்றாள் அம்மா. சிறுவனும் நண்பர்களை அழைக்கச் சென்றான். ஆறு நண்பர்களோடு இன்னும் மூன்று பேரும் வர விருப்பம் தெரிவித்தார்கள். பிறந்தநாள் விழா வந்தது. ஒன்பது நண்பர்கள் வந்தார்கள். இதை பார்த்த அம்மாவுக்கு கோபம் வந்தது. ஆறு பேரை மட்டும் கூப்பிடு என்றேன். எதற்காக 9 பேரை அழைத்தாய்? என்று அனைவர் முன்னிலையில் அவனைக் கேட்டாள். ஆறு பேரைத்தான் அழைத்தேன். வேறு மூன்று பேரும் வர விருப்பம் தெரிவித்தார்கள். நானும் சரி என்று கூறினேன் என்றான் சிறுவன். கோபம் தணியாத அந்த அம்மா அழையா விருந்தாளிகளான அந்த மூன்று சிறுவர்களை திருப்பி அனுப்பிவிட்டாள். இதுபோன்ற ஒரு விஷயத்தை நம் நாட்டில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அங்கே குடும்பத்தில் உறவுகளின் இழை இற்றுப்போகும் அளவிற்கு வந்துவிட்டது. ஒரு பக்கம் பணத்தின் படாடோபம். இன்னொரு பக்கம் அதலபாதாளத்தில் மனித உணர்வுகளின் வீழ்ச்சி. ஆஹா என்ன சுகமான வாழ்க்கை! என்ன செல்வாக்கு! என்று எண்ணத் தோன்றும். இந்த பளபளப்புக்கும் மினுமினுப்புக்கும் பின்னால் பயங்கரமான வீழ்ச்சி உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். வாழ்க்கை பற்றிய கிறிஸ்தவ கண்ணோட்டமும், ஈரமில்லாத அறிவியல் ஆராய்ச்சியும் தான் கடவுளை மறந்த மேற்கத்திய பொருளியல் முன்னேற்றத்திற்கும் மனித உணர்வுகளின், உறவுகளின் வீழ்ச்சிக்கும் காரணம். என்ன தான் அறிவியல் முன்னேற்றம் இருந்தாலும், கிறிஸ்தவ நம்பிக்கைகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. பைபிளில் கூறியதைப் போல அறிவியல் வல்லுனர்களும், இயற்கை என்பது ஜடப்பொருள், நாம் அனுபவிப்பதற்குத்தான் இருக்கிறது என்று பேசுகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில மிக முக்கியமான அறிவியல் கண்டு பிடிப்புகள் நடப்பில் இருந்த விஞ்ஞானத்தின் அடிப்படையான சில விஷயங்களை பொய்யாக்கின. புதுயுக முன்னேற்றத்திற்கு உதவிய, மிகவும் சிறந்தது என்று கருதப்பட்ட தேகார்தே, நியூட்டன் ஆகியோரின் விஞ்ஞான சித்தாந்தங்களை தகர்த்தெறிவதில் முக்கியமான பங்கு ஐன்ஸ் டீனுடையது. நியூட்டனின் விஞ்ஞானத்தில் எந்த ஒரு பொருளும் உயரம், அகலம், நீளம் என்று மூன்று அம்சங்களைக் கொண்டது என்று கூறப்பட்டது. ‘காலம்’ என்ற நான்காவது புது அம்சத்தை அறிமுகப்படுத்தினார் ஐன்ஸ்டீன். காலமும் கூட விரிவடையும், சுருங்கும் தன்மை கொண்டது. நாம் நண்பர்களுடன் இருக்கும் போது நேரம் போவதே தெரிவதில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நேரத்தை பற்றிக் கவலைப்படுவதில்லை. நேரம் பறக்கும். இப்போது நீங்கள் கேட்கும் இந்த சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளில் இருக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணி நேரமாகிறது. நிமிடத்திறகு ஒருமுறை கடிகாரத்தைப் பார்க்கிறோம். இதன்மூலம் காலமும், சுருங்குதல், விரிவடைதல் போன்ற குணங்களைக் கொண்டது என்று நாம் அறிகிறோம். காலத்திற்கு ஒரு விசேஷ தன்மை உண்டு. அது நேர்கோட்டில் செல்வதில்லை. அது வட்டப்பாதையில் செல்கிறது என்று கூறினார் ஐன்ஸ்டீன் . இரண்டாவதாக ‘வெளி’ கூட ஒரே சீரானது அல்ல. பொருளின் ஸ்பரிசம் பட்டதும் வெளி வளைகிறது என்கிறார் ஐன்ஸ்டீன். வெளியும் பொருளும் ஒன்றையொன்று பாதிக்கின்றன. பிரபஞ்சத்தின் இயக்கத்தை வெறும் ஈர்ப்பு சக்தி கட்டுப்படுத்துகிறது என்று நியூட்டன் கூறியதை மறுத்த ஐன்ஸ்டீன்; மின்காந்த சக்தியும் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது என்றார். ஒவ்வொரு கிரகத்திற்கும் என ஒரு காந்த மண்டலம் உள்ளது. இந்த காந்த மண்டலத்துடன் மின்சார மண்டலமும் உள்ளது. இந்த பிரபஞ்சத்தின் பல்வேறு செயல்கள் இந்த மின்காந்த சக்தியால்தான் நடக்கின்றன என்றார் ஐன்ஸ்டீன்.

இது ஒருபுறம் இருக்க, பிரபஞ்சத்தின் கட்டமைப்பில் ஆதாரமாக அமைந்த தத்துவங்களை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டார்கள். நம் வீடுகள் செங்கல் மேல் செங்கல் வைத்து கட்டப்படுவது போல, இந்த பிரபஞ்சத்தின் நிர்மாணத்தில் சிறுசிறு பொருட்கள் நிச்சயம் இருக்கின்றன. இப்படி சிந்தித்து ஆராய்ந்து சூட்சுமமான தத்துவங்களை கண்டறியத் துவங்கினார்கள். மாலிக்யூல்கள் (அணுத்திரள்கள்), அணுக்கள் இவற்றால் ஆனது பிரபஞ்சம் என்று முடிவு கட்டினார்கள். பல வருடங்கள் வரை அணுத்திரள், அணு இவைதான் பிரபஞ்சத்தின் கட்டமைப்புக்கு ஆதாரமான செங்கற்கள் என்று நம்பியிருந்தார்கள். அணுவையும் பிளந்தபோது விஞ்ஞானிகள் வியப்பில் ஆழ்ந்தார்கள். பரமாணுவின் உலகிற்குள் எட்டிப் பார்த்தபோது வாயடைத்துப் போனார்கள். அணுவிற்குள் நடப்பதை விவரிப்பது மிகவும் கடினம் என்றார்கள். அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரான், புரோட்டான், ஹெட்ரான், டெட்ரான், ந்யூட்ரான் போன்ற துகள்கள் லட்சோபலட்சம் எண்ணிக்கையில் தலைதெறிக்கும் வேகத்தில் சுழன்று, பரஸ்பரம் உராய்ந்து கொண்டும் மோதிக் கொண்டும் பழைய துகள் மறைந்து புதிய துகள் தோன்றிக் கொண்டும் விளக்க முடியாத ஒரு விறு விறுப்பான நாடக மேடையின் தோற்றம் காட்டி மலைக்க வைத்தன. அணுத்துகள் விஞ்ஞானி, ராபர்ட் ஓப்பன்ஹைமர், “ஒரு எலக்ட்ரானின் இடம் நிரந்தரமானதா என்று கேட்டால் இல்லை. அப்படியானால் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு அதன் இடம் மாறுகிறதோ என்றால், அதுவும் இல்லை. எலக்ட்ரான் சலனமில்லாமல் இருக்கிறதா? இல்லை. அது நகர்ந்து கொண்டேயிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை” என்றார். நேற்றுவரை திட்டவட்டதன்மையுடையது விஞ்ஞானம் என்று கூறி வந்த பலர், திட்டவட்டத் தன்மையுடையது அல்ல என்று ஒப்புக்கொண்டார்கள். அளந்து பார்க்கக்கூடிய பொருட்கள் மட்டுமே விஞ்ஞானம் என்று கூறிய பலர் அணுவுக்குள் நடப்பதையெல்லாம் பார்த்த பின்னர் அங்கே நடப்பதை திட்டவட்டத்தன்மையுடன் கூற இயலாது என்று பேசலானார்கள். இப்படியிருக்கலாம் என்று அனுமானத்தின் பேரில்தான் அவர்களால் அணுத்துகள்கள் செய்யும் செயல்களைப் பற்றிக் கூற முடிகிறது. இது இரண்டாவது முக்கியமான கண்டுபிடிப்பு.

மூன்றாவது முக்கிய கண்டுபிடிப்பு, ஒவ்வொரு அணுத்துகளுக்கும் ஈடான ஒரு துகள் பிரபஞ்சத்தில் வேறு எங்கோ உண்டு என்பது தான். ஒரு துகள், கடிகாரச் சுற்றுவட்டத்தில் சென்றால் அதற்கு ஈடான துகள் எதிர் திசையில் செல்ல ஒரு துகள் மேல் நோக்கிச் சென்றால் அதற்கு ஈடான துகள் கீழ்நோக்கிச் செல்லும். ஐன்ஸ்டீனுக்கும் நீல்ஸ் போர் என்னும் அணுத்துகள் விஞ்ஞானிக்கும் இடையே இது பற்றி ஒரு பெரிய விவாதமே நடந்தது. இது எப்படி சாத்தியமாகும்? என்று கேட்டார் ஐன்ஸ்டீன். “ஒரு துகள் இங்கு இருக்கிறது அதன் ஈடு துகள் ஆயிரம் ஒளிவருடங்களுக்கு அப்பால் ஏதோ ஒரு கிரகத்தில் உள்ளது என்று கொள்வோமானால் இந்தத் துகளின் செயல்பாடுகளை உடனடியாக அறிந்து அந்த ஈடுதுகள் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கிறது என்று எப்படிக் கூறுவது? இங்கிருக்கும் துகளின் மாற்றத்தை அறிய குறைந்தது ஆயிரம் ஒளிவருடங்கள் தேவைப்படுமல்லவா? மிகவும் வேகமாக செல்லக்கூடியது என்று கருதப்படும், ஒளிக்கே 1,000 வருடங்கள் தேவை என்னும்போது, துகளுக்கும் ஈடுதுகளுக்கும் உள்ள தொடர்பை எப்படி விளக்குவது? இது சாத்தியமில்லை” என்றார் ஐன்ஸ்டீன். ஆனால் நீல்ஸ் போர், உடனடித் தொடர்பு உள்ளது என்பதில் விடாப்படியாக இருந்தார்.

உடனடித் தொடர்பு உள்ளது என்று கூறினால் ஒளியை விடவும் வேகமாகச் செல்லும் பொருள் உள்ளது என்று கூறுவது போலாகும். இதை ‘மனம்’ என்று தான் கூற வேண்டும். இல்லாவிட்டால் துகள் -ஈடுதுகள் தொடர்பை விளக்க இயலாது.

எது எப்படியானாலும் ஒன்று நிச்சயம். பிரபஞ்சத்தின் கட்டமைப்பில் செங்கல் போல துகள் என்று ஒன்று இல்லை என்று விஞ்ஞானம் ஒப்புக்கொண்டுள்ளது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளும் பிற எல்லா பொருட்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. அதனால் பிரபஞ்சத்தின் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒரு மறுக்கமுடியாத பரஸ்பர தொடர்பு வலையில்தான் இருக்கின்றன. இதையே நமது முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்கிறார்கள். மரத்தில் விதை, விதையில் மரம் என்பார்களல்லவா? ஒரு விதையைப் போட்டால் அதிலிருந்து ஒரு மரம் வளர்கிறது. மரத்திலே தான் நாம் விதைகளைக் காண முடிகிறது. இப்படியாக அனைத்துப் பொருட்களும் பரஸ்பர தொடர்புகொண்டுள்ளன. அதனால் ஒரு சிறு துகளில் பிரபஞ்சம் உள்ளது. அந்த சிறு துகள் பிரபஞ்சத்தில் உள்ளது என்று கூறலாம்.

இரட்டை அம்சம் அல்லது ‘துவந்துவம்’ என்ற ஒரு கருத்தும் நம் நாட்டில் விளைந்த பயிர்தான். இன்ப துன்பம், இரவு பகல், வெற்றி தோல்வி, என்ற இவையெல்லாம் இரட்டைகளாகத்தான் இருக்கும். இந்த உலகமே இந்த இரட்டைகளால் ஆனது தான். இதைத்தான் துவைதம் என்பார்கள். இந்த உலகியல் துவைதத்திற்கு அப்பால் உள்ளது பரம்பொருள். இதை அத்வைதம் என்பார்கள் இவ்வாறு இந்த இரட்டை இயல்பை விஞ்ஞானம் இன்று ஒப்புக்கொண்டுள்ளது.

நம் முன்னோர்கள் பரம்பொருளான அத்வைத நிலையை விண்டுரைக்க இயலாதது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நமது உபநிடத விளக்கங்களும் விஞ்ஞானி ஓப்பன்ஹை மரின் விளக்கங்களும் பல இடங்களில் இசைந்து போவதைக் காணலாம். உபநிடதங்கள் பரம்பொருளை ததே ஜதி (அது செல்கிறது), தன்னேஜத (அது செல்வதில்லை); தத்தூரே (அது தொலைவில் உள்ளது); தத்வந்திகே (அது அருகிலேயே இருக்கிறது); ததந்தரஸ்ய ஸர்வஸ்ய (அது அனைத்து பொருட்களின் உட்பொருளாக உள்ளது); தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யத: (புற உலகிலும் நிறைந்து நிற்கிறது) – என்றெல்லாம் விளக்குகின்றன. ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே 20-21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் பயன்படுத்தும் சொற்களை எடுத்தாண்டிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். இந்த பிரபஞ்சத்தின் உண்மையை அறிய வேண்டுமானால் காலம் என்னும் தடையை மீறி சிந்திக்க வேண்டும் என்கிறது நவீன விஞ்ஞானம் இதை காலாதீதமான (காலத்திற்கு அப்பாலான) தத்துவம் என்பார்கள். காலத்திற்கு அப்பால், வர்ணனைக்கு அப்பால், இரட்டை இயல்பு (த்வைதம்), மரத்தினுள் விதை, விதையினுள் மரம் என்பது போன்ற சொற்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மேற்கத்திய சிந்தனையின் ஓட்டத்தை இதுவரை பார்த்தோம். ஹிந்து சிந்தனாமுறை வளர்ந்த விதமே வேறு. மேற்கத்திய விஞ்ஞான பரிசோதனை முறைபோல் அல்லாமல் ஹிந்து சிந்தனை வேறு விதமாகவே பரிணமித்தது. பெரிதும் அடிப்படை விஷயங்களை மிகதீர்க்கமாக அலசி ஆராய்வதில் முனைந்தார்கள் ஹிந்துக்கள். உலகிலுள்ள தத்துவ அறிஞர்கள் அனைவரும் எதிர்கொள்பவை மூன்று முக்கியமான கேள்விக் கொத்துகள் தான். அதில் முதலாவது கொத்து: நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கு செல்கிறேன்? நான் இங்கு வந்ததன் நோக்கமென்ன? இரண்டாவது கேள்விக்கொத்து: இந்த பிரபஞ்சம் என்பது என்ன? எப்போது இது தோன்றிது? எதை நோக்கிச் செல்கிறது? எதற்காகத்தான் இந்த பிரபஞ்சம் உள்ளது? மூன்றாவது: எனக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் என்ன தொடர்பு? எல்லா காலங்களிலும் உலகின் எல்லா அறிஞர்களும் இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் சிரமம் கண்டிருக்கிறார்கள். மேற்கத்திய சிந்தனையாளர்கள் முதல் கேள்விக் கொத்திற்கு பதிலளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இரண்டாம் கேள்விக்கொத்திற்கு பதில் தேடி சிந்தித்திருக்கிறார்கள். சிலர் தண்ணீர் தான் படைப்பின் (சிருஷ்டியின்) அடிப்படைப் பொருள் என்றார்கள். வேறு சிலர் எண்கள் தான் அடிப்படையான பொருள் என்றார்கள். (பிதாகரஸ் எண் தான் படைப்பின் அடிப்படைப் பொருள் என்று நம்பினார்). சிலர் நெருப்பு என்றார்கள். வேறு சிலர் காற்று என்றார்கள். இன்னும் சிலர் நிலம், காற்று நெருப்பு ஆகியவை என்றார்கள். மனிதன் என்பவன் ‘பகுத்தறிவுள்ள விலங்கு’ ‘பொருளாதார விலங்கு’, ‘கூடிவாழும் விலங்கு’ என்றெல்லாம் பலவிதமாகச் சொன்னார்கள். யாருக்குமே ஒரு முழுமையான பார்வை இருக்கவில்லை.

ஆனால் நம் நாட்டில் தான் மனிதனை பற்றி பூரணமான, விவரமான கண்ணோட்டம் இருந்து வருகிறது. நான் யார்? பார்க்க முடிகிற உடலா நான்? விளையாடும் போதும், எழும்போதும், உட்காரும்போதும், உண்ணும் போதும், தண்ணீர் பருகும்போதும், நடக்கும்போதும் நான் இந்த உடல் என்று உணர்கிறேன். உறங்கச் செல்லும்போது கூட நான் இந்த உடல்தான் என்று உணர்கிறேன். ஆனால் உறங்கும் போது கனவு காண்கிறேன். கனவிலும் கூட எழுகிறேன், உட்காருகிறேன். உண்கிறேன், தண்ணீர் பருகுகிறேன், குதிக்கிறேன், எல்லா செயல்களையும் செய்கிறேன். ஆனால் என் உடம்பு செயலற்று படுக்கையில் கிடக்கிறது. அப்படியானால், கனவைப் பார்ப்பது யார்?

இந்நாட்டின் ரிஷிகளும், முனிவர்களும், ஞானிகளும் பல எளிமையான உதாரணங்களின் மூலம் இந்த கடினமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்கள். சிலர், புராணங்கள் என்பது கட்டுக்கதைகளின், வெட்டிப் பேச்சுகளின் தொகுப்பு என்று கூறுகிறார்கள். அது சரியல்ல. எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மிக ஆழ்ந்த தத்துவங்களை புராணங்கள் சாதாரண மனிதர்களுக்குப் புரியவைக்கின்றன.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போமே. ஒருநாள் ஜனக மகாராஜா உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கனவு கண்டார். அதில் தான் எதிரி நாட்டு மன்னனோடு கடுமையாகப் போரிட்டுத் தோற்றதாகக் கண்டார். எதிரி நாட்டு மன்னன் முன்னிலையில் ஜனகர் நிறுத்தப்படுகிறார். அப்போது வெற்றிபெற்ற மன்னன், இந்த நாடு எனக்குச் சொந்தமானது, நீ இங்கிருந்து வெளியேறு என்று உத்தரவிடுகிறான். இந்த நாட்டில் யாரும் ஜனகருக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது, மீறினால் மரண தண்டனை என்று முரசறைவித்தான். ஜனகருடைய ராஜ்ஜியம் சிறியதல்ல. அதை விட்டு வெளியேறவே பல நாட்கள் ஆகிறது. நடந்தே சென்றதால் பசியும், களைப்பும் ஜனகரை வாட்டுகின்றன. இருந்தாலும் மிகுந்த சிரமத்துடன் தான் இழந்த ராஜ்ஜியத்தின் எல்லையை ஜனகர் கடக்கிறார். எல்லைக்கு அப்பால், தான் கண்ட முதல் வீட்டின் கதவைத் தட்டி உண்ண உணவு வேண்டும் என்று வேண்டுகிறார். சாலையின் மறுபுறம் ஒரு சத்திரம் இருப்பதாகவும் அங்கு சென்றால் இலவசமாக உணவு பெறலாம் என்றும் வீட்டார் சொல்கிறார்கள். களைப்பினால் சோர்ந்திருந்த ஜனகர் கஷ்டப்பட்டு சத்திரத்திற்குப் போகிறார். சத்திரப் பராமரிப்பாளர், ஐயா, நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். இங்கு சமைத்த உணவெல்லாம் தீர்ந்துவிட்டது என்று கைவிரிக்கிறார். ஜனகர் நொந்து போகிறார். ஜனகரின் பரிதாப நிலையைக் கண்ட சத்திரத்துக்காரர், சோற்றுப் பானையின் அடியில் ஒட்டிக் கொண்டிருப்பதைச் சுரண்டித் தருகிறேன், உண்ணுங்கள் என்று கூறிவிட்டு கிடைத்ததை கொண்டு வந்து கொடுக்கிறார். உணவை கையில் வாங்கிய நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த கழுகு, அதைப் பறித்துக் கொண்டு பறந்து விடுகிறது. ஜனகர் வாய் விட்டு ஓவென்று கதறுகிறார். இந்த கட்டத்தில் தூக்கம் கலைந்தது. ஜனகருடைய அலறல் கேட்டு கவலையுடன் கூடியிருந்த சேவகர்களைக் கண்டு, தான் அரண்மனையில் உள்ளதை உணர்ந்தார் ஜனகர்.

ஒரு நிமிடம் முன்பாக, பசியுடனும் தாகத்துடனும் இருந்தேன். என் உடை மிகவும் அழுக்காகியிருந்தது. உடம்பு சோர்ந்து களைத்திருந்தது. இப்போதோ அதன் அறிகுறியே இல்லை. இதற்கு எல்லாம் என்ன பொருள்? நான் முன்பு பார்த்தது சத்தியமா, இப்போது பார்ப்பது சத்தியமா? இது சத்தியமா அது சத்தியமா? என்ற சொற்கள் அவர் அறியாமலேயே அவர் வாயிலிருந்து வெளிப்பட்டன. ஓடோடி வந்த மகாராணி, மன்னா, என்ன நேர்ந்தது? என்றார். ஜனகர், எது சத்தியம்? இதுவா, அதுவா? என்றார். அமைச்சர்கள் எல்லோரும் வந்தார்கள். ராஜவைத்தியர் ஜனகருக்கு நாடி பார்த்தார். மன்னர் நலமுடனேயே இருந்தார். ஆனால் எது சத்தியம் இதுவா அதுவா? என்பதை மட்டும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார். மன்னரின் இந்தச் செயலைக் கண்டு அனைவரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.

அந்த இரவு எப்படியோ கழிந்தது. அதிகாலையில், அஷ்டாவக்கிரர் என்னும் முனிவர் வந்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அரண்மனையில் இருந்த அனைவரும் அவர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தார்கள். அவர்களிடம் அஷ்டாவக்கிரர் ஜனகர் நலமா என விசாரித்தார். அதற்கு அவர்கள், மன்னர் ஏதோ மந்திர சக்தியால் கட்டுண்டவர் போல எது சத்தியம் இதுவா, அதுவா? என்று ஜெபித்துக் கொண்டேயிருக்கிறார் என்றார்கள். அஷ்டாவக்கிரர் மன்னரிடம் சென்று நலம் விசாரித்தார். எது உண்மை , இதுவா, அதுவா? என்பதே மன்னரின் பதிலாக இருந்தது. அஷ்டாவக்கிரர் முக்காலமும் உணர்ந்த யோகி. யோக சக்தியின் மூலம் என்ன நடந்தது என்பதை அறிந்தார். மன்னா! நேற்று நீங்கள் உணவிற்காக பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, இந்த அரண்மனையும் சேவகர்களும், பொன்னும் மனியும் இருந்தனவா கூறுங்கள் என்று கேட்டார் அஷ்டாவக்கிரர். இல்லை யாரும் இருக்கவில்லை என்றார் ஜனகர். கனவிலிருந்து விழிப்புநிலைக்கு வந்தபோது, சத்திரக்காப்பாளர், கழுகு, பசி இவற்றில் ஏதாவது புலப்பட்டதா? என்று அஷ்டாவக்கிரர் கேட்டார். இல்லை என்று கூறினார் ஜனகர். அதனால் அது இருந்தபோது இது இல்லை , இது உள்ளபோது அது இல்லை. ஆகவே, இதுவும் உண்மையில்லை அதுவும் உண்மையில்லை என்றார் முனிவர். அப்படியானால் உண்மை எது? சத்தியம் எது? என்று கேட்டார் ஜனகர். அஷ்டாவக்கிரர் கூறினார், பசியால் வாடி பிச்சை எடுக்கும்போதும், இந்த சேவகர்கள் புடைசூழ அரண்மனையில் வீற்றிருக்கும்போதும் தாங்கள் உள்ளீர்கள் அல்லவா? மன்னவா, அங்கும் நீங்கள் இருந்தீர்கள், இங்கும் நீங்கள் உள்ளார்கள். அதனால் நீங்கள் மட்டுமே உண்மை (சத்தியம்) என்று விளக்கினார் அஷ்டாவக்கிரர். இப்படி ஒரு கதை உண்டு.

இது போன்ற உதாரணங்களால் விழிப்பு (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்ன), ஆழ்ந்த உறக்கம் (சுஷுப்தி) என்று மூன்று நிலைகள் உள்ளன என்பதை எளிமையாக நம் முன்னோர்கள் விளக்கிச் சென்றுள்ளார்கள். சுஷுப்தி (ஆழ்ந்த நித்திரை) நிலையில் நம் மனதும் கூட செயலாற்றுவதை நிறுத்திவிடுகிறது. ஆழ்துயிலிலிருந்து எழுந்த உடன் எவருமே, ஆஹா! நல்ல தூக்கம்! நான் சுகமாகத் தூங்கினேன் என்றுதான் சொல்வார்கள். அப்படியானால் ஆழ்துயில் சுகத்தை அனுபவித்தது யார்? இந்த கேள்வியை ஆழ்ந்து விவாதித்து, சிந்தித்து நம் முன்னோர்கள் பதிலளித்துள்ளார்கள். அது இந்த கீதை வரிகளில் காணப்படுகிறது:

“இந்த்ரியாணி பராண்யாஹுஹு

இந்த்ரியேப்யப் பரம் மனஹ

மனஸ ஸ்து பராபுத்திஹி

யோ புத்தேப் பரத ஸ்து ஸஹ”

– பகவத் கீதை (அத்.3 ஸ்லோ 42)

(புலன்கள் இந்த உடலை விடச் சிறந்தவை. புலன்களை விட மனதும் சிறந்தது. மனதை விட சிந்திக்கும் திறன் பெற்ற புத்தி (அறிவு) சிறந்தது. ஆனால் ஆன்மா புத்தியை விடவும் சிறந்ததாக இருக்கிறது).

ஆன்மா எப்படிப்பட்டது? ஆழ்துயிலில் இருக்கும் போது ஆன்மாவின் மிக அருகில் நாம் இருக்கிறோம். ஆன்மா ஆனந்த மயானது என்பதனால், அப்போது நாம் சுகத்தை, ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.

அதனால்தான் நம் முன்னோர்களான ரிஷிமுனிவர்கள், “மனிதன், உடல், மனம், அறிவு, ஆன்மா என்ற இவைகளால் ஆனவன். ஆன்மா உருவமற்றது, குணங்களற்றது, ‘அகங்கார’ மற்றது, சாஸ்வதமானது, முடிவற்றது” என்று தெளிவாக விளக்கினார்கள்.

அதன்பின் பிரபஞ்சத்தைப் பற்றியும் சிந்தித்தார்கள். பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் மாற்றமடைந்த வண்ணம் உள்ளன. நேற்று இருந்தது இன்று இல்லை, இன்று இருப்பது நாளை இருக்கப் போவதில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நம்மில் பலர் இருக்கவில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கோல்கத்தா இப்படி இருக்கவில்லை. ஐம்பது வருடங்களுக்கு அப்புறம் கோல்கத்தா இப்படியே இருக்கப் போவதில்லை. எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் எதுதான் நிரந்தரமானது?

நீண்டநெடும் தவத்தின் பலனாக நம் முன்னோர்களான ரிஷிகள், பரம்பொருள் ஒன்றே மாற்றமற்றது, சாசுவதமானது, இந்த உலகின் ஆதாரமானது. விதவித வடிவங்களும் பெயர்களும் தாங்கிய உலகம், ஆதிப் பரம்பொருள் என்னும் சமுத்திரத்தின் மேற்பரப்பில் உள்ள அலைகளை போல. அலைகள் எண்ணிக்கையிலடங்காதது. ஆனால் கடலின் ஆழத்தில் அலைகளில்லா அமைதி தவழ்கிறது. அலைகள் கடலிலிருந்து தான் எழுகின்றன, அங்கேயே அடங்கி விடுகின்றன. அதே போல் இந்த பிரபஞ்சமே பரம் பொருளிலிருந்து தான் உண்டாகிறது, அதிலேயே மறுபடியும் ஒன்றிவிடுகிறது.

“ஜைஸே ஜல தே

புத்புதா உபஜே பினஸே நீத்

ஜகரசனா தைஸேகரீ

கஹநானக் ஸுன் மீத்

” குரு க்ரந்த ஸாஹேப்

(நீர்குமிழிகள் நீரிலேயே தோன்றி அதிலேயே மறைவது போல இந்த பிரபஞ்சம் பரம்பொருளிலிருந்தே தோன்றி அதிலேயே மறைகின்றது. இதைத்தான் பரமாத்மா என்று அழைக்கிறார்கள்)

பரம்பொருளை தியானித்து அது நிர்க்குணம்; உருவமற்றது, ‘அகங்கார’ மற்றது நித்தியமானது, அழிவற்றது என்று கூறினார்கள் ரிஷிகள். இரண்டு பரம் பொருட்கள் இருப்பது சாத்தியமில்லை என்றும் கூறினார்கள். பரம்பொருள் ஒன்றே. எல்லையற்றதையும், எல்லையற்றதையும் கூட்டினாலும், கழித்தாலும், பெருக்கினாலும் வகுத்தாலும் நமக்கு கிடைப்பது எல்லையற்ற பொருளேதான். இதைத்தான் –

“பூர்ணமத: பூர்ணமிதம்

பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய

பூர்ணமேவாவ சிஷ்யதே”

(பூர்ணத்தை பூர்ணத்தால் பெருக்கினாலோ கூட்டினாலோ, கழித்தாலோ, வகுத்தாலோ பூர்ணமேதான் மிஞ்சும். பரமாத்மா ஒருவனே) என்கிறது முனிவன் வாக்கு.

ஆன்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்றால் நான் நினைப்பதை வேரொருவர் அறிய வேண்டும், வேரொருவர் நினைப்பதை நான் அறிய வேண்டும் அல்லவா? என்ற சந்தேகம் எழுகிறது. –

ஆம்! அது சாத்தியம் தான். மனதை மறைக்கும் அறியாமைத் திரையைக் கிழித்து எறிந்தால் அது சாத்தியமாகும். அந்த திரையை மாயை என்று நம் முன்னோர்கள் அழைத்தார்கள். நான் இந்த உடல் மட்டும் தான் என்று நம்மை நாமே குறுக்கிக் கொண்டு விட்டோம். ஆனால் மாயையை கடந்து மேலே சென்றால், அனைவருடைய சுகதுக்கங்களும் நம்முடையது ஆகும். குழந்தை பசியாக இருக்கிறது என்று தாய்க்கு எப்படித் தெரிகிறது? குழந்தை அழும்போது அதை தாய் அறிகிறாள். பசியாக இருக்கும் போது, தாகம் இருக்கும் போது, வயிற்று வலி இருக்கும்போது குழந்தை அழுகிறது. வயிற்றுவலியாக இருக்கும் போது மருந்து கொடுக்க வேண்டும் என்று தாய் எப்படி அறிகிறாள்? குழந்தையைப் பற்றி தாய் ஏன் மிகவும் கவலைப்படுகிறாள்? அது தன்னுடைய குழந்தை என்று உணர்வதால் தாய் இவ்வாறெல்லாம் செய்கிறாள். அதேபோல், பிறரையும் நம்மவர் என்று நாம் கருதும்போது பிறர் சுகதுக்கங்கள் நம்முடையவையாகின்றன. நான் தான் இந்தக் குடும்பம் என்று மனதை விசாலப்படுத்தி எண்ணும் போது, குடும்பத்தின் சுகதுக்கங்கள் என்னுடையதாகின்றன . இதே போலத்தான் நம்முடைய நகரத்தை அளாவியவாறு, சமுதாயத்தை அளாவியவாறு எண்ணம் விசாலமடையும் போது நகரின், சமுதாயத்தின் சுகதுக்கங்களில் நாமும் பங்கெடுக்கின்றோம். இதே போல இங்குள்ள வனவாசி சகோதர சகோதரிகளின் கஷ்டங்கள், நம்முடையதாகின்றன. இப்படியே மனிதன் தன்னுடைய ஆன்மாவை விசாலப்படுத்திக் கொண்டே சென்றால் இந்த பிரபஞ்சத்தையே தன்னில் காண்கிறான். அதனுடன் ஒன்றிவிடுகிறான். இதைத்தான் ‘மனிதன் இறைநிலை அடையும் பிரயாணம்’ என்கிறோம். மனிதன் (நரன்) கடவுள் (நாராயணன்) ஆகிறான். கடவுள் அருகில் செல்வதற்கு வழி தன்னைத்தானே விசாலப்படுத்திக் கொள்வது தான். இப்படித்தான் மனிதன் மகேசனாகிறான். அதிலிருந்து அனைத்திலும் நிறைந்த பரம்பொருளாகிறான், பூர்ணனாகிறான்.

இதுதான் நமது ஹிந்து தர்மம். ஹிந்து தர்மத்தை விளக்குங்கள் என்று யாராவது நம்மைக் கேட்டால், ஹிந்து தர்மம் தனிநபர், சமுதாயம், படைப்பு ( இயற்கை ), கடவுள் என்ற நான்கு நிலைகளுக்கும் பரிபூரண இசைவிணக்கத்தை ஏற்படுத்தி மனிதனுக்கு உடல், மனம், அறிவு, ஆன்மா என்ற அனைத்து நிலைகளிலும் ஆனந்தத்தை வழங்கும் முயற்சி என்போம். இந்த குறிக்கோளை அடைவதற்காக செய்யப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் ஹிந்து தர்மத்தின் அங்கங்கள் ஆகின்றன. இதுதான் ஹிந்து கண்ணோட்டம் அல்லது உலகு தழுவிய ஹிந்து கண்ணோட்டம்.

உலகு தழுவிய கண்ணோட்டம் என்பதில் ஹிந்து தர்மத்தின் பார்வைக்கும் மேற்கத்திய நாடுகளின் பார்வைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மேற்கத்திய சிந்தனாமுறையில் உலகு தழுவிய கண்ணோட்டம் என்றால் உயிர்வாழப் போட்டாபோட்டி, வல்லவன் மட்டுமே வாழுதல், இயற்கையை சுரண்டுதல், தனிமனித உரிமைகள் இவையெல்லாம்தான் முக்கிய அம்சங்களாக உள்ளன. தர்மத்தின் அடிப்படையிலான ஹிந்துக் கண்ணோட்டம் இந்த நான்கு அம்சங்களையுமே நிராகரிக்கிறது. உயிர் வாழப் போட்டா போட்டியே இல்லை. ஏனென்றால் எல்லாமே பரம்பொருளின் வடிவம். சர்வம் கல்விதம் ப்ரம்ம. பிரபஞ்சம் பரம்பொருளின் விரிவாக்கமே என்றால் போட்டாபோட்டி என்பதற்கு இடமே இல்லை . எங்கும் நிலவுவது பரஸ்பர உதவியும் இசைவிணக்கமும்தான். ஆனால் எல்லா இடங்களிலும் போட்டாபோட்டி தென்படுகிறதே? என்று கூறி இதை சிலர் மறுக்கலாம். அது அவர்களின் அறியாமையின் விளைவு. இது எதிரெதிர் திசையிலிருந்துவரும் இரு நண்பர்கள் இருட்டறை ஒன்றில் மோதிக் கொள்வது போல். மோதிக் கொள்கிறவர்கள் கைகலப்பிலும் இறங்குகிறார்கள். அறையில் வெளிச்சம் வந்தவுடன், அட நீயா? என்று இருவரும் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்கிறார்கள். நண்பர்களான நாம் வீணாக சண்டை போட்டுக் கொண்டிருந்தோமே என்று உணர்கிறார்கள். உண்மை தெரிந்ததும் மோதல் நிற்கிறது.

திறன்மிக்கவர்களே வாழத் தகுதியுடையவர்கள் என்ற இரண்டாம் அம்சத்தையும் நாம் ஏற்கவில்லை. சர்வே பவந்து சுகினஹ (அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்) என்றுதான் நாம் கூறு கிறோம். சக்தி மிகுந்தவன் மட்டும் வாழ வேண்டும். மற்றவறெல்லாம் மடிய வேண்டுமா? மேற்கத்திய பொருளியல் சித்தாந்தமே தகுதியுள்ளவன் மட்டுமே, சக்திசாலி மட்டுமே வாழ வேண்டும், மற்றவரெல்லாம் வாழத் தகுதியற்றவர்கள், அவர்கள் அழிந்தால் அழியட்டும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையிலானது. பிறரும் வாழ வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்நாட்டில் நாம் இந்தக் கருத்தை ஏற்பதில்லை. சக்தியுடையவர்கள், திறமையானவர்கள், பல வீனர்களை அரவணைத்து, அவர்களின் வாழ்க்கையையும் மகிழ்ச்சிகரமானதாய் ஆக்க வேண்டும் என்ற கருத்துடைபவர்கள் நாம்.

இயற்கையை சுரண்டுதல் என்பது நமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நம்முடைய அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே இயற்கை வளத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நாம். இயற்கையை அன்னை என்கிறோம். குழந்தை தன் வயிறு நிரம்பும் வரை மட்டுமே தாயிடமிருந்து தாய்ப்பாலை அருந்து கிறது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வயிறு நிறைந்தவுடன், தாயே கட்டாயப்படுத்தினாலும் குழந்தை பாலைக் குடிக்க மறுக்கிறது. அதனால் தான் எவ்வளவு அத்தியாவசியமோ அவ்வளவே இயற்கையிடமிருந்து கொள்ளவேண்டும் என்கிறோம். ப

தேன த்யக்தேன புஞ்ஜீதா; (தியாக உணர்வுடன் சுகத்தை நாடுதல்). நம் ஆசையைப் பூர்த்திசெய்ய இயற்கையிடம் போதுமான வளங்கள் உள்ளது; நம் பேராசையை அல்ல. அதனால் மிகத் தேவையானதை மட்டுமே இயற்கையிடமிருந்து எடுக்கும் பழக்கம் நமக்கு வேண்டும். இதைத்தான் ‘தாக்குப் பிடிக்கக்கூடிய நுகர்வு’ என்பார்கள். நிறைய சம்பாதிக்க இறைவன் நமக்கு புத்தியையும் சக்தியையும் அளித்துள்ளான். ஆனால் அத்தியாவசியமானதை மட்டுமே பெற நாம் முயற்சி செய்ய வேண்டும். மற்றவையெல்லாம் இறைவனுக்கே சொந்தம்.

“ஈசா வாஸ்யம் இதம் சர்வம்

யத்கிஞ்ச ஜசுத்யாம் ஜகத்

தேன த்யக்தேன புஞ்ஜீதாஹா

மாக்ருதஹ கஸ்யஸ்வித்தனம்.”

– ஈஸாவாஸ்ய உபநிடதம்

(பேராசை கூடாது. இந்தச் செல்வம் கடவுளுடையது, நம்முடையது அல்ல. இந்த உலகில் நாம் காணும் அனைத்தும் கடவுளுக்கே சொந்தம். அத்தியாவசியத்தை மட்டுமே எடுத்துக்கொள். தியாகத்தில் மகிழ்ச்சிகொள்)

நாம் தனிமனித உரிமைகளை சரி என ஏற்றுக்கொள்வதில்லை; ஏனென்றால் நாம் வெறும் தனி நபர்கள் மட்டுமே என்பதை ஏற்பவர்களல்ல. நான் சுதர்சன். எனக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது? ஏன் வந்தது? ஆண்டர்சன் என்று ஏன் இல்லை ? சர்மத் கான் என்று ஏன் இல்லை ஏனென்றால் நான் பிறந்த சமுதாயத்தில் சூட்டப்பட்ட ஒவ்வொரு பெயருக்கும் குறிப்பிட்ட பொருள் உண்டு. நான் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் ஆண்டர்ஸன் என்று பெயரிட்டிருப்பார்கள். அதனால்தான் பெயர் தனிமனிதனை மட்டும் குறிப்பிடவில்லை அவன் சார்ந்து இருக்கும் சமூகத்தையும் குறிப்பிடுகிறது. நான் தனிமனிதனா? நான் செல்லும் போது, இவன்தான் என் மகன் என்கிறார் என் தாயார். என் அக்கா, என் தம்பி செல்கிறான் என்கிறாள். தாத்தா என் பேரன் செல்கிறான் என்கிறார். மாமா என் மருமகன் செல்கிறான் என்கிறார். இப்படி நான் தனி மனிதனல்ல. பலவிதமான உறவுகளால் பல தனிமனிதர்களுடன் பிணைக்கப்பட்டுள்ளேன். நம்முடைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கும் போது மாப்பிள்ளையின் பூர்வீகம், பழக்கவழக்கம், நடத்தை போன்றவற்றை கேட்டு விசாரித்து தெரிந்து கொள்கிறோம். பையன் நல்லவன், படித்தவன். அது சரி, அவன் பெற்றோர் எப்படி? பெற்றோரைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்? நல்ல மாப்பிள்ளை வேண்டும், பையன் நல்லவனாக இருக்கிறான் இது போதாதா? என்று கேட்கக்கூடும். இதற்கு நாம் பதில் என்னவாயிருக்கும்? நீங்கள் சொல்வது போல மாப்பிள்ளை சரியாக இருக்கலாம். ஆனால் அவன் பெற்றோர் மோசமானவர்களாக இருந்தால்? அதைப் பற்றியும் யோசிக்க வேண்டியது அவசியம் அல்லவா? இவையெல்லாம் நாம் தனிநபர் மட்டும் அல்ல என்பதைத்தான் சுட்டிக்காட்டு கின்றன. நம் இஷ்டப்படி நடக்க நமக்கு சுதந்திரம் கிடையாது. நாம் நல்ல செயல்களைச் செய்தால் நம் பெற்றோர் மகிழ்ச்சி அடைவார்கள். நாம் கெட்ட செயல் செய்தால், பெற்ற தாயே ‘எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டாயே’ என்று கூறிவிடுவார். என் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிட்டாய் என்பார் தந்தை. அண்ணா! என்ன காரியம் செய்துவிட்டாய் என்பாள் தங்கை. நான் விரும்புவதை செய்ய எனக்கு சுதந்திரம் கிடையாது. ஒரு பெரிய அமைப்பின் அங்கம் நான். நான் என் குடும்பத்தின் அங்கத்தினன். குடும்பம் சமுதாயத்தின் அங்கம். சமுதாயம் தேசத்தின் அங்கம். தேசம் மனிதகுலத்தின் அங்கம். மனிதகுலம் இந்த பிரபஞ்சத்தின் அங்கம். இந்த பிரபஞ்சமே பரம்பொருளின் அங்கம்.

தனிநபர் முதல் பரம்பொருள் வரை நாம் அனைவரும் உயிருள்ள உடலின் உறுப்புகள் போல பிணைக்கப்பட்டுள்ளோம். உடல், அதன் உறுப்புகள் என்ற உறவில் உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. யாருடைய உரிமை? யாருக்கு உரிமை? கை, கால், கண் இவற்றிற்கு எல்லாம் தனித்தனி உரிமை உண்டா? எதற்கும் அப்படி உரிமை இல்லை. கடமைதான் இருக்கிறது. ஒவ்வொரு அங்கமும் உடலுக்காக உழைக்கிறது, பதிலுக்கு உடல், அங்கங்களை பராமரிக்கிறது. யாராவது ஒரு இரும்புத்தடியால் நம் தலையில் அடிக்க முயலும் போது நமது கை அனிச்சைச் செயலாக தடுக்க முன்வருகிறது அல்லவா? தலையைத் தடுக்க நான் சென்றால் அந்த அடி என்மேல் விழுமே என்று கை சிந்திக்கிறதா? காலில் முள் குத்தினாலும், கணமும் தாமதமின்றி முள்ளை எடுக்கிறது கை. இந்த உடல் முழுவதும் நான் என்ற உணர்வு ஓட்டம் இருப்பதால் இதுபோன்ற செயல்கள் சாத்தியமாகின்றன. குடும்பத்திற்காக ஒவ்வொரு தனிநபரும் முயற்சி செய்கிறார். அதனால் குடும்பம் ஒவ்வொருவரையும் பராமரிக்கிறது. குடும்பம் சமுதாய மேம்பாட்டுக்காக இயங்குகிறது; சமுதாயம் குடும்பத்தை காப்பாற்றுகிறது.

ஒவ்வொரு சமுதாயமும் மனித குலத்தின் நன்மைக்காக செயல்படுகிறது. மனித குலமும் ஒவ்வொரு சமுதாயத்தின் தனித்தன்மையை காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது. மனிதன் இயற்கையை பேணிப் பாதுகாக்கிறான். இயற்கையும் மனிதன் உயிர்வாழத் தேவையான பொருட்களைத் தந்து உதவுகிறது. இந்தக் கொடுக்கல்-வாங்கல் கடவுள் எங்கும் நிறைந்தவராக உள்ளார் என்கிற அடிப்படை நம்பிக்கையின் பேரில்தான் நடக்கிறது.

இதுதான் ஹிந்து தத்துவம். இதுதான் ஹிந்து தர்மம். வழிபடு முறைகள் வேறுபடலாம். அணு கு முறைகள் வேறுபடலாம். கடவுளை சிலர் தாயாகப் பார்க்கிறார்கள், தந்தையாகப் பார்க் கிறார்கள் சிலர், சகோதரனாகவும் கருதுகிறார்கள் சிலர் அவன் உருவம் உள்ளவன் என்பார்கள் சிலர். உருவமற்றவன் என்பார் சிலர். ஐந்து முகங்களுடையவன் என்று சிலர் கூறினால் அவன் நான் முகன் என்று கூறுபவரும் இருக்கிறார்கள். வழிபடு முறைகள் பலவானாலும் தர்மம் ஒன்று தான். இதைத்தான் சனாதன தர்மம், அழிவற்ற தர்மம் என்றழைக்கிறோம். ஜீவநதியாகப் பிரவாகமெடுக்கும் தர்மம் இது தான். இதன் கோட்பாடுகள் நேற்றும் உண்மை; இன்றும் உண்மை; நாளையும் உண்மையாகத்தான் இருக்கும் என்பதால் இதை அழிவற்றது, சாசுவதமானது என்கிறோம். இது ஹிந்துக்களுடையது மட்டுமல்ல பரந்த இந்த உலகிலுள்ள அனைவருடைய தர்மம். இது மானவ (மனித குல ) தர்மம். இந்த உண்மையை ஹிந்துக்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததால் இதை ஹிந்து தர்மம் என்கிறோம். நியூட்டன் புவியீர்ப்பு சக்தியின் செயல்பாட்டை கண்டறிந்ததால், ‘நியூட்டன் புவியீர்ப்பு தத்துவம்’ என்ப போலத்தான் இதுவும். ஐன்ஸ்டீன் கண்டு பிடித்தால் அவருக்கு முன்னாலேயே இருந்த போதும் அதை ஐன்ஸ்டீனின் சார்பு சித்தாந்தம் (ரிலேட்டிவிட்டி) என்கிறோம். (ஜைன மதத்தில் ஐன்ஸ்டீனுக்கு முன்னேயே ‘ஸ்யாத் வாதம்’ என்னும் தத்துவமாக ரிலேட்டிவிட்டி விளக்கப்பட்டுள்லது. ஆள்காட்டி விரல் நடுவிரலை விடச் சின்னது ஆனால் சுண்டு விரலை விடப் பெரியது. இதுதான் ரிலேட்டிவிட்டி).

ஹிந்துக்களால் உலகிற்கு அளிக்கப்பட்டதால் அது ஹிந்து தர்மம் என்று அழைக்கப்படு கிறது. பார்க்கப்போனால் இது மனித குலத்தின் தர்மமாகும். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் ஹிந்து தர்மம் விஸ்வ தர்மம் (உலக தர்மம்) ஆகிறது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையில் வாழ்க்கை கோட்பாடுகளைச் சிந்திக்கும் போது நமக்குக் கிடைப்பது ஹிந்து கலாச்சாரம். ஹிந்து கலாச்சாரம் ஒரு நாட்டின் எல்லைக்கு உட்பட்டது. ஆனால் ஹிந்து தர்மம் எல்லாவிதமான எல்லைகளையும் கடந்து உலகமக்கள் அனைவருக்கும் உகந்தது ஆகிறது. புத்தம் புதிய விஞ்ஞான கண்டு பிடிப்புக்கள் ஹிந்து தர்மத்தின் அடிப்படை தத்துவங்களை விளக்குவது போல அமைந்துள்ளன. ஹிந்து தர்மமும் விஞ்ஞானமும் நெருக்கமாக உள்ளன என்பதை இது புலப்படுத்துகிறது.

இன்றைய உலகம் ஒரு மகத்தான அடிப்படை மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அடிப்படை மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதற்கு 20-30 வருடங்களுக்கு முன்னாலேயே அதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். சமூகவியல் நிபுணர்கள் இந்த அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளார்கள்: ‘எல்லாம் அன்னியமாகிப் போய் விட்டது, எதுவும் உருப்படாது, எல்லாம் இருக்கிறபடியேத்தான் இருக்கும்’ என்பது போன்ற மனப்பான்மை மக்களிடையே காணப்படும். மன ரீதியான பிரச்சினைகள், கொடூரம் மிகுந்த வன்முறையால் குற்றங்கள் அதிகமாகும், சமுதாயம் சீர்குலையத் துவங்கும், புதுப்புது சம்பிரதாயங்கள் தலை தூக்கும்.

இதையெல்லாம் படிக்க விந்தையாக இருக்கலாம். இவற்றில் பல அழிவை குறிப்பதாக இருந்தாலும், பலப் புதுப்பது சம்பிரதாயங்கள் தோன்றும் என்பது ஆக்கப்பூர்வமான அறிகுறியாகத் தோன்றுகிறது. எல்லா முனைகளிலும் நம்பிக்கை அழிந்து போனாலும், கடைசியில் தெய்வ பக்திதான் பலத்தை, ஊட்டத்தை அளிக்கும்.

“அப பல தபபல அவுர் பாஹுபல

சௌதோ ஹை பல தாம்

சூர் கிசோர் க்ருபா

தேஸப பல ஹாரே கோ ஹரிநாம்”

– சூர்தாஸர்

(அசுர பலம், தவசக்தி, தோள் வலிமை, நான்காவது பணபலம் இவையெல்லாம் இருக்கின்றன. ஆனால் சூர்தாசன் கூறுகிறான், அனைத்தையும் இழந்து தவிக்கும் போது தெய்வபக்தி ஒன்றே நம்மை மீட்கும்).

இந்த அறிகுறிகளை பாரத நாட்டில் மட்டுமல்ல, உலகின் எல்லா இடங்களிலும் இப்போது காண முடிகிறது. சமூகவியல் அறிஞர்கள் அடிப்படை மாற்றம் நிகழ்வது உறுதி என்று கூறுகிறார்கள். உலகாயத அறிவியலை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நமது பொருளாதாரக் கட்டமைப்பே ஒரு பெரும் மாற்றம் கண்டுள்ளது. அதனால் ஹிந்து தர்மத்திற்கு மிக நெருக்கமான புதிய அறிவியலின் அடிப்படையில் சமூக, அரசியல், பொருளாதார அமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த அடிப்படை மாற்றத்தில் பாரத மக்கள் பெரும் பங்கு ஆற்ற வேண்டியுள்ளது. நம் ஞானிகள் முன்பே கூறியது போல், அடுத்த ஆயிரம் வருடங்கள், ஹிந்து புத்தாயிரமாண்டாக இருக்க போகின்றன. ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால் சுவாமி விவேகானந்தர் கூறினார்: “நான் எதிர்காலத்தை பார்க்கவில்லை. அது பற்றி நான் கவலைப்படுவதாகவும் இல்லை. என் இந்த வாழ்க்கை போல தெளிவான ஒரு காட்சியை என் கண்முன்னால் காண்கிறேன். புராதனமான நம் அன்னை மறுபடியும் விழித்தெழுந்து, புத்துணர்வுடன் அரியணையில் வீற்றிருக்கிறாள். அவள் வருகையை அறிவியுங்கள்”. 1947 ஆகஸ்டு 15 அன்று அரவிந்த மகரிஷி கூறினார்: “இன்னும் சிலகாலம் நம்முடைய இந்த நாடு தவறான பாதையிலே செல்லும். ஆனால் எதிர்காலத்தில் உலகிற்கே தலைமை ஏற்க வேண்டிவரும்”. மகாத்மா காந்தியும் கூறியுள்ளார்: “ஹிந்துத்துவம் என்பது தொய்வில்லா சத்திய சோதனையாகும். அது சக்தியிழந்து செயலிழந்து, வளர்ச்சியை ஏற்பதாக இல்லாமல் இருப்பதற்கு காரணம், நாம் சோர்ந்திருப்பது தான். நாம் இந்தச் சோர்வி லிருந்து விடு பட்ட கணமே ஹிந்துத்துவம் முன்பு எப்போதும் அறிந்திராத பிரகாசத்துடன் வெடித்துக் கிளம்பி இந்த உலகில் மிளிரும்”.

நண்பர்களே, ஹிந்துத்துவம் உலகில் பாய்ந்து பரவும் நாள் நெருங்கி விட்டது. நாம் எல்லோரும் விழித்தெழிந்து, உற்சாகத்துடன் அந்த நாளை வரவேற்போம்!

வந்தே மாதரம்!


Leave a comment