ஹிந்து சாம்ராஜ்ய தினம்
“நமது இதிகாசங்களில் போற்றப்படும் ஒரு லட்சிய அரசனின் வடிவமானவர் சத்ரபதி சிவாஜி. தேசத்தின் உண்மையான உள்ளுணர்வைப் பிரதிபலித்த பாரதத்தாயின் தலைமகன். வருங்கால பாரதம் ஒரே குடையின் கீழ் வலுப்பெறப் போவதை நிதர்சனமாய் காட்டியவர் அவர். சிவாஜியை விட சிறந்த ஒரு நாயகனை. ஒரு புனிதனை, ஒரு பக்தனை, ஒரு மன்னனை உங்களால் காண முடியுமா?” – இவை இந்த தேசத்துக்கு அடையாளம் கூறிய சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள்.
நமது தேசத்தின் வரலாற்றை எழுதிய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும், மெக்காலே புத்திரர்களும், ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டார்கள். முகலாயர்கள்தான் ஆங்கிலேயருக்கு முன்னால் இந்த தேசத்தை ஆண்ட பரம்பரை என்றார்கள் அவர்கள். இது ஒரு வரலாற்றுப் புரட்டு. இந்த விஷயத்தில், கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரனாய் வந்து, மராட்டியருக்கு எதிராக பல போர்களில் கலந்து கொண்டு, பின்னர் வரலாற்று ஆராய்ச்சியாளனாய் மாறிய ஜேம்ஸ் க்ராண்ட் டஃப், பின் வருமாறு கூறுகிறார். “முகமதியர்களின் சிம்மாசனத்தை முழுமையாக சிதறடித்துவிட்ட சுதேச ஆட்சியாளர்கள்தான், ஆங்கிலேயருக்கு முன் இந்த தேசத்தை ஆண்டவர்கள். சிவாஜிக்குப் பின்னர் படிப்படியாக வளர்ந்த ஹிந்து சக்தி, வங்காளம் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியைத் தவிர முழு தேசத்தையும் மீட்டுவிட்டது. அந்த சுதேச ஹிந்து சக்தியிடமிருந்துதான் ஆங்கிலேயர்களாகிய நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்” என்று மராட்டியரின் வரலாறு என்ற தனது நூலில், கராண்ட் டஃப் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
முகமது நபியின் மறைவுக்குப் பின், பொது ஆண்டு 636-ல் காபூலில், அரேபியர்களால் ஆரம்பிக்கப்பட்ட மத வெறிப் போரானது. அதன் பின் துருக்கியர். ஆப்கானியர், முகலாயர் என நீண்டது. அவர்களை எதிர்த்த நமது மண்ணின் மாவீரர்களின் சாகசக் காவியத்தின் நிறைவு அத்தியாயமானது. சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டும் வைபவத்தால் எழுதப்பட்டது. அன்று 1674 ஜயேஷ்ட சுகல த்ரயோதசி அதாவது ஜூன் 6. மத்திய கிழக்கு ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள இன்றைய அனைத்து இஸ்லாமிய நாடுகளும் 20-30 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பைத் தாக்குபிடிக்க முடியாமல், இஸ்லாத்துக்கு மாற்றப் பட்டுவிட்டன. 1038 ஆண்டுகள் ஹிந்துக்கள் நிகழ்த்திய போராட்டமானது உலக அதிசயமாகப் போற்றப்பட வேண்டிய ஒன்று.
ஒவ்வொரு அங்குல மண்ணுக்காகவும், ஒவ்வொரு ஹிந்து மகளிரின் கற்புக்காகவும், ஒவ்வொரு ஹிந்துக் குழந்தையின் எதிர் காலத்துக்காகவும், பாரதத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடந்த நீண்ட நெடிய போராட்டம் அது. எதிரிகள் கொள்ளையடித்துச் சென்ற செல்வம் கணக்கில் அடங்காது. கோவில்கள் தகர்க்கப் பட்டன. படுகொலைகளும் சூறையாடலும் எல்லை மீறின. ஆட்சியைக் கைப்பற்றிய அவர்கள் நம் சொந்த மக்களையே மதம் மாற்றி அன்னியர்களாக ஆக்கிவிட்டனர். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற சாதுக்களும் முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வரலாற்றில் பலவிதமான பரிசோதனைகள் நடந்தன. பல அரசர்களும் பல விதமாக , வீரத்துடன் போரிட்டனர். இறுதியில் சத்ரபதி சிவாஜி கையாண்ட வழிமுறைகள் தான் வெற்றிக்கு வித்திட்டன. வெற்றியைக் கண்ட பின்னரே ஹிந்து சமுதாயத்துக்கு நம்பிக்கை பிறந்தது. எனவே சத்ரபதி சிவாஜி முடிசூடிய நாளை நாம் ‘ஹிந்து சாமராஜ்ய’ தினமாகக் கொண்டாடுகிறோம்.
அந்த வீரக்காவியத்தில் பொன்னெழுத்துக்களால் பதிந்துவிட்டவர். வீர மங்கை சிவாஜியின் தாயார் ஜீஜாபாய். வடக்கே முகலாயரும் தெற்கே பீஜப்பூர் சுல்தானியரும் கழுத்தை நெறிக்க, வீரமிகு மராட்டியரும், கேவலம் வயிற்றுப் பாட்டிற்காக அன்னியரிடம் சேவகம் செய்தனர். சிவாஜியின் தந்தை ஷாஹாஜியின் நிலைமையும் அதுதான். சுல்தானியரின் அக்கிரமங்கள் எல்லை மீறின. ஜீஜாபாய் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவளது தந்தை லக்குஜி ஜாதவும், மூன்று சகோதரர்களும் அகமதுநகரின் நிஜாம்ஷா-வினால் துரோகத்தால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டனர்.
ஷாஹாஜியின் ஜாஹீராக இருந்த பூனே. ஆதில்ஷாவின் கட்டளைப்படி சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டு மயானம் போலானது. இதயத்தைப் பிழிந்த சோகத்திலும் , வீர மங்கை இஜாபாய் உள்ளத்தில் சுயராஜ்ய கனல் மூண்டெழுந்தது. ஆக்கிரமிப்பாளர்களை அழித்தொழிக்கத் தனக்கு ஸ்ரீராமனைப் போன்ற மகனோ அல்லது துர்க்கையைப் போன்ற மகளோ பிறக்க வேண்டும் என அன்னை பவானியை ஆத்ம சுத்தியுடன் தினமும் அவள் பூஜித்தாள். காப்ப காலத்தில் ஜீஜாபாயின் ஆசை என்னவாக இருந்தது தெரியுமா? புலியின் மீது ஏறியமர்ந்து வாளை சுழற்றியபடி எதிரிகளை வெட்டி வீழ்த்த வேண்டும். தர்மப் போர் நடத்தி ராமராஜ்யத்தை மலரச் செய்ய வேண்டும் என்பதுதான். 1630ம் ஆண்டு வைசாக மாத சுகலபட்ச த்ருதியை திதி அன்று சிவாஜியை பூனாவின் சிவனேரிக் கோட்டையில் ஜீஜா மாதா பெற்றெடுத்தாள். அன்னையிடமிருந்து ராமாயண மகாபாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தான் சிறுவன் சிவாஜி. அந்த சிறுவனுக்குள் தேசத்தையும் தர்மத்தையும் காக்கக்கூடிய ஒரு மன்னனுக்குத் தேவையான லட்சிய விதைகளை ஜீஜா மாதா விதைத்துவிட்டாள். அவள் தாய் மட்டுமல்ல, தர்மத்தைக் காக்க வந்த அதி தேவதை.
சிவாஜிக்கு பத்து வயதான போது சிறுவன் சிவாஜியையும் உடனழைத்துக் கொண்டு ஷாஹாஜி பீஜப்பூர் சுல்தானின் அரசவைக்கு சென்றார். அரசவை வழக்கப்படி தலையைத் தரையில் பதித்து சுல்தானை வணங்க வேண்டும். ஷாஹாஜி அதே முறையில் வணங்கினார். கொடூரமான இந்த முறையை வெறுத்த சிவாஜி, மராட்டிய முறையில் மரியாதை செலுத்தினான். ஆனால் சுல்தான் இதை அவமானமாகக் கருதி கோபம் கொண்டான். சிறுவன் சிவாஜி, கிராமத்தில் வளர்ந்ததால் இந்த அரச வழக்கங்கள் அவனுக்குத் தெரியாது என்று சமாதானம் கூறி மன்னிப்பு கேட்டு அழைத்து வந்துவிட்டார் ஷாஹாஜி . சிவாஜியின் மனதில் அன்னியரின் அடிமை ஆட்சியின் மீதுள்ள வெறுப்பை ஷாஹாஜி அறியாதவரல்ல.
ஷாஹாஜிக்கும். தனது மகன் சிவாஜி, ஒரு சுதந்திரமான ஆட்சியாளனாக ஆக வேண்டும் என விருப்பம் இருந்தாலும், அந்த விஷயத்தில் தன் மகனை ஆதரிக்கும் சூழ்நிலையில் அவர் இல்லை. அவர் சேவகம் செய்வதோ சுல்தானியரிடத்தில் மைந்தனின் உள்ளக் கிடக்கை நனவாவதற்குத் தன் பரிபூரண ஆசிகளை மட்டுமே அவரால் அளிக்க முடிந்தது. தந்தையும், தனது கொள்கையை மனப்பூர்வமாக ஆதரிப்பதை உணர்ந்து கொண்டார் சிவாஜி. அவர் தந்தையுடன் தங்கியிருந்தால் ஒருவேளை சுயராஜ்யம் சாத்தியமாகாமல் போயிருக்கலாம். ஜீஜா மாதாவுடன் பூனா திரும்பிய சிவாஜி . சுதந்திரமான ஒரு ஹிந்து ராஜ்யத்துக்கான முயற்சிகளில் இறங்கினார்.
தனது 14வது வயதில் நண்பர்களுடன், சஹயாத்ரி மலையில் , ரோஹிரேஷ்வர் கோவிலில், தனது கை கட்டை விரலைக் கீறி, சிவலிங்கத்துக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்து ஹிந்தவி ஸ்வராஜ்யம்’ அமைப்பதற்கான சபதம் ஏற்றுக் கொண்டார். தாதாஜி நரச பிரபு தேஷ்பாண்டே – வுக்கு, தனது 15வது வயதில் எழுதிய கடிதத்தில் ‘ஹிந்தவி ஸ்வராஜ்யம்’ என்ற சொல்லைக் குறிப்பிடுகிறார் சிவாஜி. அந்தக் கடிதத்தில் “பகவான் ரோஹிரேஷ்வர்தான் நமக்கு வெற்றியைக் கொடுத்துள்ளார். ஹிந்தவி ஸ்வராஜ்யம்’ பற்றிய நமது வேட்கையை அவர் நிறைவேற்றுவார். ஸ்வராஜ்யம் அமைவது என்பது தெய்வசங்கல்பம்” என்று எழுதியுள்ளார் சிவாஜி.
தனது 16வது வயதில் தோரணா கோட்டையைத் தன் சிறு படையைக் கொண்டு கைப்பற்றினார் சிவாஜி. கோட்டைகள்தான் சாம்ராஜ்யத்தின் எல்லைகளைத் தீர்மானித்தன. அவர் நிகழ்த்திய பல்வேறு போர்கள் எதிலும் அவர் தோல்வியுறவே இல்லை . காரணம் எதிரிகளை சரியாகப் புரிந்து கொள்ளுதல், புதுப்புது யுக்திகளைக் கையாளுதல், தனது கடைசி வீரன் வரை மட்டுமல்ல. பொதுமக்கள் வரை சுயராஜ்ய லட்சிய உணர்வை ஏற்படுத்தியமை, தனிப்பட்ட ஒழுக்கம் எனக் கூறிக்கொண்டே செல்லலாம். அப்ஸல்கான் வதம், செயிஸ்டகானின் மீது அதிரடித் தாக்குதல் என்பதிலிருந்து. வலிமை வாய்ந்த முகலாயரின் ஆகரா கோட்டையிலிருந்து சாமர்த்தியமாகப் பழக்கூடையில் தப்பியது வரை, ஒவ்வொன்றுமே வியக்க வைக்கும் சாகசங்கள். இறுதியில் 1674ல் சிவாஜி, சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டபோது, முகலாய ஒளரங்கசீப் அதை அங்கீகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை . அஷ்டப்ரதான் என்னும் மந்திரி சபையுடன் சிவாஜி நடத்திய ஆட்சியும் சிறப்பானதே ஐரோப்பியரையும் அதிர வைத்த கடற்படையும் அவரிடம் இருந்தது.
“சிந்து முதல் காவேரிக்கு அப்பால் வரை பரந்து விரிந்துள்ள நமது புண்ணிய பூமியிலிருந்து, ஒரு ஆக்கிரமிப்பாளனை கூட விட்டு வைக்காமல் விரட்டி அடித்து நாட்டின் அத்தனை கோவில்களும், புண்ணிய இடங்களும் மீண்டும் எழுப்பப் பட்டு, புனர் நிர்மாணம் செய்வதே எனது குறிக்கோள்” என்று சிவாஜி பிரகடனம் செய்தார். பஞ்சாபில் சீக்கியர்களும், ராஜஸ்தானில் ராஜபுத்திரர்களும் ஒருங்கிணைந்து பலம் பெற்று விட்டார்கள். புந்தேள்கண்டின் சத்ரஸாலும் சிவாஜியால் ஊக்கம் பெற்று சுதந்திர அரசு நிறுவினார். அஸ்ஸாமின் சகரத்வஜசிங்கும், ருத்ரசிங்கும் அன்னியரை கால்பதிக்க விடமாட்டோம் என உறுதிபூண்டு வெற்றியும் பெற்றனர். அனைவருக்கும் சிவாஜியின் வெற்றி, உந்து சக்தியாக அமைந்தது.
1680ல் சத்ரபதி சிவாஜி உடல் நலக் குறைபாட்டால் காலமானார். அவர் தனது இறுதி காலம் வரை, அன்றைய சூழ்நிலையில், அசுர பலம் வாய்ந்த ஔரங்கசீப்பின் முகலாய சாம்ராஜ்யத்துடன் தொடர்ந்து மோத வேண்டியிருந்தது. மராட்டியரை அடக்குவதற்காகவே தலைநகரைத் தக்காணத்துக்கு மாற்றி, சிவாஜியின் மறைவுக்குப் பினனரும் 27 ஆண்டுகள் போராட்டத்தில் முகலாயருக்கு ஏராளமனன உயிரிழப்புடன் கஜானா கரைந்ததுதான் மிச்சம், சத்ரபதி சிவாஜிக்குப் பின்னர் சம்பாஜி. ராஜாராம், ஷாஹுஜி சத்ரபதிகளாகவும், அதன் பின்னர் பேஷ்வாக்கள் என்ற மந்திரிகள் காலத்திலும் சுயராஜ்யக் கனல் கனன்று எழுந்து முழு பாரதத்தையும் கிட்டத்தட்ட தழுவிக் கொண்டது. முகலாயர் ராஜ்யமோ பலவீனமாகிப் போனது.
1761ல் நடந்த மூன்றாம் பானிப்பட்டு யுத்தத்தில் ஆப்கானிய ஆக்கிரமிப்பாளனான அகமதுஷா அப்தாலி தலைமையில் அணிவகுத்த இஸ்லாமியர்களை எதிர்த்து நடந்த கடுமையான யுத்தத்தில், துரதிர்ஷ்ட வசத்தால் ஹிந்துக்கள் தோற்றாலும், அதன் பின்னரும், மராட்டிய சுயராஜ்ய கூட்டமைப்பு, ஆங்கிலேயருடன் மூன்று போர்களை நடத்தி, 1818ல் தான் முழுவதும் ஆங்கிலேயர் வசமானது. மூன்றாம் பானிப்பட் போரில் ஹிந்துக்கள் வெற்றி பெற்றிருந்திருந்தால். ஆங்கிலேயரையும் தோற்கடித்துத் துரத்தியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். வரலாறும் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும்.
1875ல் ராமோஷி மற்றும் பில் இன மக்களிடையே வீரர்களைத் திரட்டி வெள்ளையர்களை நடுங்க வைத்தவர் வாசுதேவ் பல்வந்த் ஃபட்கே. ஃபட்கே தனது தலைக்கு விலை அறிவித்த வெள்ளை அதிகாரிகளின் தலைக்கே பதிலுக்கு விலை அறிவித்து, அவர்களை சுட்டு வீழ்த்தினார். கொரில்லா போர்முறையைக் கையாண்ட அவர். இளைஞர்களிடம் ராணா ப்ரதாப சிம்மனையும், சத்ரபதி சிவாஜியையும் முன்னுதாரணமாகக் கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தார். மகாராஷ்ட்ராவின் பூனே அருகில் உள்ள ஏழு மாவட்டங்களில் சிறிது காலம் பிரிட்டிஷ் ஆட்சியில்லை கிட்டத்தட்ட ஃபட்கேவின் ஆட்சிதான் நடந்தது. வாசுதேவ் பல்வந்த் ஃபட்கேவை மக்கள் இரண்டாம் சிவாஜி என்றே அழைத்தனர்.
இந்திய அமைதியின்மையின் தந்தை என பிரிட்டிஷாரால் அழைக்கப்பட்ட பாலகங்காதர திலகர் . “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்” என முழங்கினார். 1895ல் ஒரு குழுவை அமைத்து, சத்ரபதி சிவாஜியின் ஜெயந்தியைக் கொண்டாடத் துவங்கினார். சத்ரபதி சிவாஜியிடமிருந்து உத்வேகம் பெறுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் சிம்மகட் கோட்டைக்கு வந்து சிறிது நேரம் தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் திலகர் . “ஒரு தேசம் என்கிற முறையில், நமது உள்ளுணர்வை உயிரூட்டி வளர்க்கக் கூடிய ஊற்று ஹிந்துத்வமாகத்தான் இருக்க வேண்டும்” என திலகர் அறிவித்துள்ளார்.
ஆகவே 19ம் நூற்றாண்டிலிருந்து 20ம் நூற்றாண்டு துவக்கம் வரை, ஆங்கிலேயரை எதிர்த்த போராட்டத்தில், தேசிய எழுச்சிக்கு உணர்வூட்டியது சத்ரபதி சிவாஜியின் ஆற்றல் மிகு போராட்டங்களும், சுயராஜ்ய உணர்வுமேயாகும். அதன் பின்னரும் தொடர்ந்து சத்ரபதி சிவாஜியின் ராஜதந்திர வழி முறைகளைக் கையாண்டிருந்தால் வெற்றியும் பெற்றிருப்போம்; பாகிஸ்தான் என்றொரு நாடும் உருவாகியிருக்காது.
சத்ரபதி சிவாஜி ஒரு பேரரசராக இருந்தாலும் எந்த தவறான பழக்கங்களும் இல்லாதவராக இருந்தார். முகலாயரை எதிர்த்து போரிட்டாலும், அவர்களைப் போலல்லாமல், போர்களில் பெண்களைக் கைது செய்வதற்குத் தடை விதித்திருந்தார். பெண்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அதிகாரிகள், தளபதிகள் மற்றும் வீரர்கள், பெண்கள் விஷயத்தில் கட்டுக் கோப்பாக இருக்கப் பணிக்கப் பட்டனர். ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுபட்ட சிவாஜி, ஒரு ராஜ ரிஷியாகவே வாழ்ந்தார். சத்ரபதி சிவாஜியின் ‘ஹிந்தவி ஸ்வராஜ்யத்தில் ‘ ஜாதி பேதமில்லை . அவருடைய படையில் அனைத்து சமூகத்தினரும் போர் புரிந்தனர். மத பேதமில்லை. முஸ்லீம்களும் சம உரிமையுடன் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். சங்கத்தில் ஹிந்து ராஷ்டரம்’ என்ற கண்ணோட்டத்தின்படி, நமது தேசத்தின் 130 கோடி ஜனங்களும் ஹிந்துக்களே. ஹிந்து பண்பாடும், ஹிந்து பாரம்பரியமும், ஹிந்து தேசியமும் நம்மை இணைக்கின்றன. வழிபாட்டை மாற்றிவிட்டால் தேசியம் மாறிவிடாது.
ஹிந்தவி ஸ்வராஜ்’ என்ற உன்னத லட்சியத்தை. சாதாரண ஜனங்களின் மனதிலும் ஏற்படுத்தி, அவர்களை மாவீரர்களாக்கி மகத்தான சாதனைகளைப் படைத்ததே சத்ரபதி சிவாஜியின் வெற்றியின் ரகசியமாகும். ஒவ்வொரு ஹிந்துவின் உள்ளத்திலும், ஹிந்து பாரம்பரியத்தின் பெருமிதத்தை உருவாக்கி, நமது ஹிந்து ராஷ்ட்ரத்தின் பரம வைபவம்’ என்னும் மகோன்னத லட்சியத்தை ஏற்படுத்தி, தேசத்துக்காக மகிழ்ச்சியோடு பணிபுரியச் செய்ய, பரம பூஜனிய டாக்டர்ஜி, சங்கத்தை ஆரம்பித்தார். தொற்று நோய் பரவி, தேசமே துவண்டு போய் கிடக்கும் தருணத்திலும், போர் வீரனின் துணிச்சலுடன் நமது ஸ்வயம் சேவகர்கள் மக்களுக்குத் தொண்டாற்றி வருவதைப் பார்க்கிறோம். மக்கள் தொண்டில் மகேசனைக் காண்பவர்கள் நாம். அன்றாட சந்திப்பு என்னும் அற்புதமான வேலை முறையைக் கொண்டுள்ள நாம் , இந்த ஊரடங்கு கால கட்டத்தில் மனதால் இணைந்துள்ளோம். தொழில் நுட்பத்தையும் இந்தப் பணியில் திறம்பட ஈடுபடுத்தியுள்ளோம்.
நமது பகுதியின் ஒவ்வொரு பஸ்தியிலும், ஒவ்வொரு மண்டலிலும் உள்ள, ஒவ்வொரு ஹிந்துவின் உள்ளத்திலும், நம்பிக்கை ஒளி ஏற்ற வேண்டும். நெருக்கடியான இந்த நேரத்திலும், நெருக்கடி அகன்ற பின்னும் கீழ்க்கண்ட நான்கு விஷயங்களுக்கு நாம் கவனம் கொடுக்க வேண்டும்.
1. பாதுகாப்பு நெறி முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளி, முகக்கவசம், கை கழுவுதல் இவற்றுடன் முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்றவையும் அவசியம்.
2. பண்புகளைப் பயிற்றுவிக்கும் பல்கலை சாலையாகக் குடும்பங்கள் ஆகவேண்டும்.
3. சுற்றுச் சூழலை சுகாதாரமாகப் பராமரித்தல் அவசியம். ஊரடங்கு காலத்தில் இயற்கை தன்னை சுத்தப் படுத்திக் கொண்டது. அதை மீண்டும் கெடாமல் காக்க வேண்டும்.
4. தேசத்தின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக நாம் அனைவரும் சுதேசித் தயாரிப்புகளைப் பயன்படுத்துதல், தரமான உள்நாட்டுத் தயாரிப்புகளை அதிகரித்தல் அவசியம்.
நமது பாரம்பரிய வாழ்க்கை முறையின் பெருமையையும், உலகத்தையே ஒரு குடும்பமாகப் பார்க்கும் ஹிந்துப் பண்பாட்டின் மேன்மையையும், இன்று உலகமே பார்த்து தலை வணங்குகிறது. வெறுப்பும், பொறாமையும் அதே நேரத்தில் மரண பயமும் உலக நாடுகளின் மனங்களை ஆட்டிப் படைக்கும் இத்தருணத்தில், அன்பெனும் அமுதத்தை அள்ளி வழங்கக் காத்திருக்கிறாள் பாரத அன்னை . துஷ்டர்களுக்கு அவள் துர்கை, வறியவருக்கு அவள் அன்னபூரணி. பண்டைய காலம் தொட்டு வந்த வரலாறே அதற்கு சாட்சி. இனி வரும் காலத்தில் பாரதம் உலகை வழி நடத்தும்.
பாரத் மாதா கி ஜய்.