ரமேஷ் பதங்கே
வனவாசி சகோதரர்கள்
சமுதாய நல்லிணக்கம் பற்றி சிந்திக்கும்பொழுது வனவாசி சகோதரர்களையும் பற்றி சிந்திக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் அவர்களை ‘ஆதிவாசி’ என்று கூறினார்கள். அதாவது வனவாசிகள் ஆதிவாசிகள், மற்ற அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று பொருள்படுகிறது. ”ஆதிவாசிகள் பாரதத்தின் பழங்குடிமக்கள், ஆரியர்கள் அவர்களின் மீது படையெடுத்து, காட்டுக்குத் துரத்தினார்கள். ஆதிவாசிகள் இயற்கையையும், விலங்குகளையும் வழிபடுபவர்கள். ஹிந்து சமயத்திற்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஹிந்து சமுதாய கட்டமைப்பில் அவர்களுக்கென்று இடமில்லை. நான்கு வர்ணங்களில் அவர்கள் இடம்பெறவில்லை” போன்ற கருத்துக்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் மிஷனரிகள் பரப்பி குழப்பம் ஏற்படுத்தினார்கள்.
ஆதிவாசி என்னும் சொல்லை உபயோகிப்பது அதனால் ஏற்படும் குழப்பத்தால் வரக்கூடிய ஆபத்துகளை ஸ்ரீ குருஜி அறிந்திருந்தார். மலைகளில், குகைகளில் வசிக்கும் இந்த சகோதரர்களை அவர் அந்நியர்களாக எண்ணவில்லை. அவர்களை ‘வனவாசி’ என்று குறிப்பிட்டார். நகரத்தில் வசிப்பவர்கள் நகரவாசி, கிராமத்தில் வசிப்பவர்கள் கிராமவாசி. அதுபோன்று வனத்தில் வசிப்பவர்களுக்கு வனவாசி என்று பெயர் கொடுத்தார் ஸ்ரீ குருஜி. நகரவாசி, கிராமவாசி, வனவாசி, நாம் அனைவரும் பாரதவாசிகளே. பாரதமாதாவின் நற்புத்திரர்கள். ஒரே மாபெரும் சமுதாயத்தின் அங்கம். ஒரே தேசத்தின் அங்கம் என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து.
வனத்தில் வசிக்கும் நமது சகோதரர்களுடன் நமக்கு நல்லிணக்கம் ஏற்படவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று விவரிக்கையில் ஸ்ரீ குருஜி, “புறக்கணிக்கப்பட்ட இந்த சகோதர்களிடையே சென்று அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முழுசக்தியுடன் பாடுபட வேண்டும். அவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்படி திட்டமிட வேண்டும். இந்த சிந்தனைகளை செயல்படுத்துவதன் பொருட்டு, கல்விக்கூடம், மாணவர் விடுதி பயிற்சி மையங்கள் ஆகியவற்றை திறக்கவேண்டும். ஹிந்து சமுதாயத்தில் மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் நல்லிணக்கம் ஏற்படுவதன் பொருட்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் எண்ணங்களை விட்டொழித்து, சமத்துவ எண்ணத்துடன் மனப்பூர்வமாக அவர்களுடன் பழகிவரவேண்டும். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11.)
வனவாசிகளின் வாழ்க்கை முறையை ஸ்ரீ குருஜி நன்கு அறிந்திருந்தார். ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் நாடோடிகளாகத் திரியும் அவர்களது இயல்பை நன்கு அறிந்திருந்தார். நிலையான வசிப்பிடம் இருந்தால்தான் கல்வி, பண்புப்பதிவு ஆகியவை கைகூடும். ‘மக்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்வதற்கு தூண்ட மனிதாபிமானத்துடன் முயன்றால்தான் முடியும். வனங்களில் வசிக்கும் இந்த சகோதரர்களை சந்தித்தபின் அவர்கள் பல நல்ல குணங்கள் நிரம்பப் பெற்றவர்கள் என்பதை அறிய முடிகிறது. துணிவு, அறிவுகூர்மை, உழைப்பு, நேர்மை, மனப்பூர்வமான பரிவு, கலாச்சார ஆன்மிக தகுதி. சிறந்த படைவீரர்களை வனவாசி சமூகம் தந்திருந்தது.”- இது ஸ்ரீ குருஜி கூறும் விஷயம். வனவாசிகள் வசிக்குமிடத்தில், அந்நிய நாட்டு மத போதகர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களது செயல்பாடுகளினால் தேச ஒற்றுமைக்கு பேராபத்து என்பதை அவர் அறிவார். ஆயினும், விமர்சனம் செய்வதை அவர் விரும்பவில்லை. ”அந்நிய நாட்டு மதத்தை பிரசாரம் செய்பவர்களின் செயல்முறையை நாம் நன்கு கவனிக்கவேண்டும். அவர்களின் செயல்பாடுகளில் எத்தகைய தீவிர ஈடுபாடும், முயற்சியும் காணப்படுகிறது. அவர்கள் எவ்வளவு பெரிய துயரங்களையும் புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கின்றனர். தொலைதூர நாடுகளிலிருந்து வந்து வனங்களுக்கு சென்று, அங்கு வசிக்கும் மக்களின் மத்தியில் சிறு குடிலில் வசிப்பதென்பது, சந்தேகத்திற்கிடமின்றி பாராட்டத்தக்கதும், பின்பற்றக் கூடியதுமாகும். அவர்கள் வனவாசி மக்களுடன் பழகி அவர்களது மொழியையும் கற்று, அவர்களது பழக்கவழக்கங்களுடன் இரண்டறக் கலந்து விடுகின்றனர். அவர்களின் பழகுமுறை மென்மையானது; மிகவும் அன்புடன் பழகுகிறார்கள். நாம் இந்த மிஷனரிகளிடமிருந்து சிறிதேனும் தெரிந்து கொள்ள இயலாதா? (ஸ்ரீ குருஜி சிந்தனை களஞ்சியம், தொகுதி-11)
ஹிந்து சமுதாயம் பல நூற்றாண்டுகள் வரை வனவாசிகளை கவனிக்காமல் விட்டுவிட்டதால் எண்ணாததால், அவர்கள் மற்ற ஹிந்துக்களிடமிருந்து விலகி நிற்கின்றனர். அன்பும், தொடர்பும் இல்லாது போய்விட்டது. அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு உகந்த தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படாததால், அவர்களது உற்பத்தித்திறன் குறைந்து, அவர்கள் ஏழைகளாகி விட்டனர்.
சமயஞானம் அவர்களை சென்றடையாததால், மூடநம்பிக்கைகள் தொடர்பான செயல்களில் சிக்கியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் ஸ்ரீ குருஜி நினைவுபடுத்துகிறார். எத்தனை இடர்கள் வந்தாலும், துயரங்கள் வந்தாலும், அனைத்தையும் கடந்து, நாம் வனவாசிகளின் வசிப்பிடத்திற்கு சென்று பணிபுரிய வேண்டும். மற்ற ஹிந்துக்கள் அவர்களிடையே சென்று, அவர்களுக்கு கல்வி புகட்டி, கலாசாரத் தரத்தையும் அவர்களின் வாழ்க்கை நிலையையும் உயர்த்தி இதுவரை அவர்களை மறந்திருந்ததற்கு பிராயச்சித்தம் செய்தல் வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறார். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்: தொகுதி-11,)
சுருங்கக்கூறின், நமது வனவாசி சகோதரர்கள் நம்மவர்கள் என்பது ஸ்ரீ குருஜியின் கண்ணோட்டம். ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அவர்களை உதாசீனப்படுத்தியதே, அவர்களின் இன்றைய மோசமான நிலைக்கு காரணம் என்று அவர் கூறுகிறார். இதற்கு பிராயச்சித்தமாக, அவர்களுக்கு கருணை காட்டுவதாக இல்லாமல், நமது கடமை என்றெண்ணி அவர்களுக்கு தொண்டு புரியும்படி இதயத்தின் அடியாழத்திலிருந்து அவர் அறைகூவல் விடுத்தார். ஸ்ரீ குருஜியின் இந்த கண்ணோட்டத்தினால் தான் வனவாசி கல்யாண் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டு, வனவாசி சகோதரர்களுக்கு தொண்டு செய்யும் அமைப்பாக விளங்குகிறது. இன்று இந்த அமைப்பின் மூலம் இந்த உயர்ந்த பணி, நாடு முழுவதும் சிறந்த முறையில் நடைபெற்றுவருகிறது.
சேவை
சமுதாய நல்லிணக்கம் ஏற்படுவதில் தொண்டுப் பணியின் பங்களிப்பு ஈடு இணையற்றது. சமுதாயத்தில் பலவகைகளில் சேவை நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கான தூண்டுதலும் வெவ்வேறு விதமாக உள்ளது. பல தொண்டுகள் புண்ணியம் சேர்ப்பதற்காக நடக்கின்றன. சில தொண்டுகளுக்கு கருணை தூண்டுதலாக அமைகிறது. சிலர் புகழ் பெறுவதற்காக சேவை செய்கிறார்கள். சிலர் பண்பாளர்களாவதற்கு தொண்டு புரிகிறார்கள். சிலர் சேவாகாரியங்களை, அரசியலில் நுழைவதற்கு வாயிலாக கருதுகிறார்கள். ஸ்ரீ குருஜி சேவாகார்யங்கள் பற்றி பரந்த மிக விரிவான கண்ணோட்டத்தை முன்வைத்தார்:
ஸ்ரீ குருஜியின் ஆளுமையிலும் சிந்தனைகளும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களின் ஆழ்ந்த தாக்கம் இருந்தது. சுவாமி விவேகானந்தர் தரித்திர நாராயணன்’ என்னும் சொற்றொடர் பயன்படுத்தினார். ஏழையிடம் இறைவன் வசிக்கிறான் என்று எண்ண வேண்டும்; ‘ஜீவனுக்கு சேவை சிவனுக்கு பூஜை’ என்ற உணர்வுடன் சேவை செய்ய வேண்டும். ஸ்ரீ குருஜி இந்த பாதையில் செல்லும் சாதகர். ‘ஏழ்மையில் வாடுபவர்களையும், துன்புறுபவர்களையும் காணும்போது, அவர்கள் அனைவரையும் இறைவனின் வடிவம், இறைவனே தனக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்திருக்கிறான் என்று எண்ணி, அந்த எண்ணத்துடன் அவர்களுக்கு சேவைபுரிய முனையுங்கள் ” என்று அவர் கூறுகிறார். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-5,)
இன்று சமுதாயத்தில் இன்னல்களும், ஏழ்மையும் கடுமையாக உள்ளன. சமுதாயத்தின் ஓரிடத்தில் சிலர் அனைத்து செல்வங்களும் நிரம்பப் பெற்றிருக்கின்றனர். மற்றோரிடத்தில் மக்கள் முற்றிலும் நலிந்து கிடக்கிறார்கள். அவர்கள் ஒருவேளை கூட வயிறார உண்ண முடியாமல் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் பற்றியே ஸ்ரீ குருஜி இரவும் பகலும் எண்ணிக் கொண்டிருந்தார். ஸ்ரீ குருஜியிடம் மிகவும் பிரியமுள்ள ஒரு கார்யகர்த்தா, உடல் நலத்தின் பொருட்டு தினமும் உணவில் சுத்த நெய் சேர்க்கவேண்டும் என்று எழுதி, நெய் அனுப்பியிருந்தார். அவருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீ குருஜி, ”நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை உண்ண உணவு கிடைக்காமல் உள்ளனர். அப்படி இருக்கும்போது, நெய் சேர்ப்பது என்பது என்னால் இயலாது” என்று குறிப்பிட்டிருந்தார். இதே காரணத்தினால், ஸ்ரீ குருஜி ஒரு வேளை மட்டுமே உணவருந்தினார். நல்லிணக்கம் காண இதை விட சிறந்த வழிமுறை வேறென்ன இருக்க முடியும்?
பசியுடன் உடுக்க உடையின்றி தாகத்தால் வாடி, பிணியால் நொந்தவர்கள் எல்லா வீதிகளிலும் தென்படுகிறார்கள். இதை நினைவில் கொண்டு, “எவரும் பசியால் வாடும்படி விடமாட்டோம் என்று உறுதியுடன் நாம் அனைவரும் செய்லபட வேண்டும். ‘பீடிக்கப்பட்ட ஒருவர் நம் பொறுப்பில் உள்ளார்’ என்று எண்ண வேண்டும் என்றார். நமது உண்மையான சமயம் என்ன என்பதை அவ்வப்போது நினைவுபடுத்தினார். “சமுதாயத்தைப் புறக்கணிப்பது நமது சமயமல்ல. சில நேரங்களில் மனிதர்கள், ஆன்மீகவாதி என்பதன் பொருளை விந்தையாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் விபூதி பூசிக்கொள்கிறார்கள், சந்தனம் பூசிக்கொள்கிறார்கள், மணி அடித்து விளக்கமாக பூஜை செய்கிறார்கள். ஆனால், சமுதாயத்தைப் பற்றி எண்ணுவதில்லை. இது ஆன்மீகம் அல்ல; சமயவாதி என்ற தோற்றத்தை உருவாக்கும் வேலை இது. இந்த சமுதாயம் நம்முடையது. எனவே, சமுதாயத்தைப் பற்றி சிந்தனை செய்வதும், தன்னைத்தானே காத்துக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்படுத்துவதும் நமது சமயம்”. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-5,)
மனிதனை இறைவனின் வடிவமாக எண்ணி, அவனுக்கு தொண்டு புரிய வேண்டும் என்பதே ஸ்ரீ குருஜியின் வாக்கு. சேவையின் மூலம் என்ன ஏற்பட வேண்டும் என்று தெளிவாக்குகிறார். “சமுதாயத்தை தன்னம்பிக்கை உடையதாகவும், முன்னேற்றம் அடைந்ததாகவும், சுயமரியாதை உடையதாகவும் உருவாக்குதல் வேண்டும். சமுதாயத்தின் பாதுகாப்புக்காக முயற்சிக்க வேண்டும். எனவே, நமது மக்களிடையே நிலவும் வேறுபாடுகளை அகற்றி, நாம் உண்மையான, மனப்பூர்வமான, பரிவு நிறைந்த ஒருமையை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் நமக்கு நெருங்கியவர்கள் என்ற எண்ணம் பேச்சளவோடு – இல்லாமல் உளப்பூர்வமாக உண்மையானதாக இருக்க வேண்டும். சொல்லில் ஒன்று, மனதில் ஒன்று போன்ற வெளிவேட அனுதாபம் தேவையில்லை. சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு சோதரரும் நம்மைச் சேர்ந்தவர் என்ற தூய பரிவு என்ற அவசியம்” (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-3, பக்கம்-)
சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு நமது மனநிலை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை ஸ்ரீ குருஜி வரையறுத்திருக்கிறார். சமுதாய நல்லிணக்கம் என்பது மனதின் தன்மை. பரிவு இல்லாமல் நல்லிணக்கம் ஏற்படாது. எனவே தான், ஸ்ரீகுருஜி ‘நம்மவர் என்ற பரிவு’ என்னும் உணர்வை அடிக்கடி நினைவூட்டுகிறார்.
ஹிந்து சமுதாயத்தின் அனைத்து மக்களிடையேயும், எவ்வாறு நல்லிணக்க நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறாரோ அவ்வாறே, ‘மதசிறுபான்மையோர்’ எனப்படும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோர் சமுதாயத்துடன் எவ்வாறு இணக்கமாகிட வேண்டும் என்பதையும் ஸ்ரீ குருஜி குறிப்பிட்டுள்ளார். “பாரதத்தில் சிறுபான்மையினர் தாங்கள் தனிப்பட்டவர்கள் என்று கூறாமல், தேசிய வாழ்வுடன் ஒன்றிப்போக வேண்டும். அவர்கள் தாங்கள் தனிப்பட்டவர்கள் என்று நினைப்பார்களேயானால் பிரிவினை எண்ணம் வளரும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதின் தூண்டுதலால் அது வளர்ந்து ஒவ்வொரு பிரதேசத்திலும் ”குட்டி பாகிஸ்தான் கோரிக்கை வலுவாகி வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக ஆளும் கட்சியினரும், மற்ற அரசியல் தலைவர்களும் சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இதனால் தனிப்படுதல் ஊக்குவிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. தேசிய வாழ்வுடன் ஒன்றிணைந்து தாங்கள் தனிப்பட்டவர்கள் என்ற பேச்சைக் கைவிட்டு, சிறுபான்மையினர் முழுமையாக தேசிய வாழ்வுடன் ஒன்றிப்போவதே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். இந்த காரணத்தினால் தான் நான், ஹிந்து மதத்திற்கே மீண்டும் வந்துவிடுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறேன். அவர்களது முன்னோர்கள் ஹிந்துக்களே. எனவே, அவர்கள் தங்களது வேரான ஹிந்து தர்மத்திற்கு மீண்டும் வருவதன் மூலம் தேசிய வாழ்வுடன் எளிதில் இணக்கம் கொள்ளமுடியும். இன்று சுத்தி செய்வதன் மூலம் ஹிந்து தர்மத்தை ஏற்றுக்கொள்கின்றனர். ஆயினும், பாரதத்தில் ஹிந்து அல்லாதவர்களில் பெரும்பாலானவர்களின் முன்னோர்கள் ஹிந்துக்களாக இருப்பதால், ‘சுத்திகரணம்’ என்று கூறாமல், ‘சொந்த வீட்டிற்கு திரும்புதல்’ என்றே கூறுகிறேன்.
கேள்வி: அவர்கள் ஹிந்து தர்மத்தை ஏற்றுக்கொள்ளும் போது, சுத்தி சடங்கு அவசியமில்லை என்று தாங்கள் கருதுகிறீர்களா?
ஸ்ரீ குருஜி: சுத்திசடங்கு இருக்கட்டும். ஆனால், அது நாம் ஹிந்து தர்மத்திற்கு திரும்பி விட்டோம் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதற்கு மட்டுமே. கடவுளை அவரவர்களின் பரம்பரையில் வந்துள்ள விதிமுறைப்படி வழிபடட்டும். இதற்கு எவ்வித ஆட்சேபணையும் இருக்கக் கூடாது. கடவுளை உண்டு என்று ஏற்றுக்கொண்டபின், கடவுளை பலவிதங்களில் வழிபடலாம் என ஹிந்து தர்மம் ஏற்கிறது. எனவே, மீண்டும் ஹிந்து தர்மத்திற்கு வருகின்றவர்களின் வழிபாட்டுமுறை முன்பு பழகிய விதமாகவே இருக்கலாம். இதற்கு எவ்வித ஆட்சேபணையும் இருக்கக்கூடாது.
ஆயினும், தேசிய வாழ்வில் நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் கொண்டுவருவதற்கு பதிலாக, பிரிவினையும் மற்றும் ஒற்றுமையின்மையும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு காரணமாக இருப்பவர்கள் தங்களை பொறுப்புள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். உதாரணமாக, உருது மொழியை எடுத்துக்கொள்வோம். பாரதத்தின் தேசிய மொழியை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக உருதுமொழிக்கு அங்கீகாரம் கோருகிறார்கள். இதற்கு அங்கீகாரம் அளிப்பவர்கள் அரசியல் தலைவர்களே. துருக்கி நாட்டில் துருக்கி, பாரசீகத்தில் பார்சி, அரேபியாவில் அரபுமொழி ஆகியவையே உள்ளன. சுருங்கக்கூறினால், எந்த விதத்திலும் தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற எண்ணம் வரக்கூடாது. பிரிவினையை வளர்ப்பது உகந்ததல்ல. உருதுமொழிக்கு அரசு அங்கீகாரம் அளிப்பது குறித்த கேள்வியும் எழாது. சிறுபான்மையினர்கள் ருஸ்தம் என்றழைக்கப்பட்ட வீரனை முன்மாதிரியாக வைத்துக்கொள்வதும் பிரிவினைதான். ருஸ்தம் நம் தேசத்தவனே அல்ல. அவன் முஸ்லீமூம் அல்ல. அவன் நமது தேசத்தின் மாமனிதனுமல்ல. எனவே தேசிய புருஷன் என்ற இடத்தை அவனுக்கு அளிக்கக்கூடாது. ருஸ்தம் என்பவனின் இடத்தில் ராமபிரானை முன்மாதிரியாக வைப்போம். எவர் நமது தேசத்திற்கான உதாரண புருஷரோ அவரையே முன்மாதிரியாக வைத்துக்கொள்ள வேண்டும். இங்கிருந்து ஆரம்பித்து தேசத்தின் ஒவ்வொரு இடத்திலும் முழுமையான சமத்துவம் எவ்வாறு உருவாகும் என்பதை உணர்த்துவதற்கு வேண்டுமென்றே இந்த உதாரணம் கூறினேன். இதிலிருந்து முழுமையான நல்லிணக்கம் என்பதன் பொருள் நன்கு விளங்கும் (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-7,)
உலகளாவிய நெறிமுறை
சகோதரத்துவம் என்பது குறித்து எங்கும் பேசுகின்றனர். ஆனால், பரந்த மனிதர்களிடையே சகோதரத்துவத்தின் விழிப்புணர்ச்சி எவ்வாறு தோன்றும், அதற்கு அடிப்படை என்ன என்பது பற்றி ஒருமித்த கருத்து இல்லை. அனைவரும் கிறித்தவர்களானாலோ, அல்லது அனைவரும் முஸ்லிம்களானாலோ அல்லது உலகத்தில் அனைத்திடங்களிலும் புரட்சி ஏற்பட்டு பாட்டாளிகளின் ஆதிக்கம் ஏற்பட்டாலோ சகோதரத்துவம் ஏற்படும் என்று வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுதும் ஹிந்துக்களாக வேண்டும் என்று ஸ்ரீ குருஜி ஒருபோதும் கூறியதில்லை . முதலில் நாம் முழுமையான மனிதனாக விளங்குவதற்கு முயலுவோம் என்று அவர் கூறினார். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்கள் நம் வாழ்க்கையில் காணப்படுவதே முழுமையான மனிதனாவதற்கு ஒப்பாகும். உலகத்திற்கு இந்த நான்கு புருஷார்த்தங்களின் பழமையான உண்மையை கற்றுக்கொடுப்பதற்கு நாம் தகுதியுடையவர்களாக வேண்டும். உலக மக்களுக்கு நம் முன்னுதாரணம் மற்றும் லட்சியதால் இந்த உண்மையை அறியச் செய்ய வேண்டும். இது உலகிற்கு நன்மை பயக்கக்கூடியதுமாகும். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-5, பக்கம்-)
இந்த தகுதி ஜாதிகளின் பெயரால் பிளவுபட்டிருந்தால் வராது, தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால் வராது, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தினால் வராது. நல்லிணக்கம் வாய்ந்த சமுதாய வாழ்வினால் மட்டுமே நமக்குள் இத்தகைய தகுதி உருவாகும். சகோதரத்துவத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை நாமே உலகத்தின் முன் வாழ்ந்து காட்டவேண்டும். ஸ்ரீ குருஜியின் சிந்தனை இவ்வாறாக இருந்தது. ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பதே ஸ்ரீ குருஜியின் வாழ்க்கை குறிக்கோளாக இருந்தது. அனைத்து ஹிந்துக்களிடையேயும், சமத்துவம், சகோதரத்துவம், ஒருமைப்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதே ஹிந்துக்களின் ஒருங்கிணைப்பாகும். ஒருவருக்கு மற்றொருவரிடத்தில் மனப்பூர்வமான சமத்துவம் தோன்றாவிடில், சகோதரத்துவமும், ஒருமைப்பாடும் தோன்றாது. நான் அல்ல, நீயே தான்’ என்பதே அவரது வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருந்தது. நானும் நீயும் வேறல்ல, ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவம். உன்னிடத்தில் நானும், என்னிடத்தில் நீயுமாக இருக்கிறோம் என்பதே அவரது உள்ளுணர்வாக இருந்தது. இதனால் அவரிடத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன், பெரியவன்-சிறியவன், மேல்ஜாதி – கீழ் ஜாதி, தீண்டத்தக்கவன்- தீண்டத்தகாதவன் போன்ற வேறுபாடுகள் இல்லை. அனைவரும் மானிடர்களே என்ற எண்ணத்தினால் அவரது உள்ளத்தில், அன்பு வெள்ளம் எப்பொழுதும் பிரவாகமெடுத்தது. அவரது தனிமனித வாழ்வில், அவர் நல்லிணக்க நாயகராகத் திகழ்ந்தார். நல்லிணக்கத்தின் உயிருள்ள, நடமாடும் முன்னோடியாக அவர் தனது வாழ்க்கையில் திகழ்ந்தார். இதுவே அவரது சிறப்பு.
பிற்சேர்க்கை
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கர்நாடக மாநில மாநாடு வெற்றிகரமாக முடிந்தபிறகு கர்நாடக கார்யகர்த்தாக்களுக்கு ஸ்ரீ குருஜி எழுதிய கடிதம்:
“விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கர்நாடக மாநில மாநாடு நிறைவடைந்தது. ஏற்பாடு செய்தவர்கள், கார்யகர்த்தாக்கள் எதிர்பார்த்ததை விட பலமடங்கு மிகுந்த பயனளிக்கக் கூடிய சூழ்நிலையோடு நிறைவடைந்தது. இதனால் இயல்பாகவே நமது எதிர்பார்ப்புகளும் பெருகும். அதிசயத்தக்க நிகழ்ச்சி ஏற்படும், நிலைமை மாறிவிடும் என்பது இதன் பொருளல்ல. தொடர் பணிகள் அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஹிந்து சமுதாயத்தின் ஒருமைக்கும் மாற்றத்திற்கு சங்க நாதம் மாநாட்டில் முழங்கப்பட்டது ஆயினும், இந்த வெற்றியால் நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது.
“ஒரு எடுத்துக்காட்டை இங்கு குறிப்பிடுகிறேன். தீண்டாமை என்னும் சாபக்கேட்டை ஒழிப்பதற்தான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நமது அனைத்து சம்பிரதாயங்களையும் சேர்ந்த அனைத்து ஆசார்யர்களும், சமய சான்றோர்களும், மடாதிபதிகளும் இதற்கு ஒப்புதல் அளித்து, ஆசிகளையும் தந்தனர். ஆயினும், இந்த தீர்மானத்தை நடைமுறைபடுத்த புனிதமான வார்த்தைகள் மட்டும் போதுமானதல்ல. பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் இந்த தீய வழக்கத்தை வார்த்தைகளினால் அல்லது நல்ல எண்ணங்களினால் மட்டுமே ஒழிக்க இயலாது. அயராத உழைப்பும், தகுந்த பிரசாரமும் செய்தல் வேண்டும். ஒவ்வொரு நகரத்திற்கும், கிராமத்திற்கும், வீட்டிற்கும் சென்று, தீண்டாமையை ஒழிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாயிற்று என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். இது இன்றைய நவீன காலத்தின் கட்டாயத்தினால் அல்லாமல் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ளவதன் பொருட்டு, ஏற்பட்ட மனப்பூர்வமான மாற்றம். இந்த மாற்றத்தை ஏற்போம். உளப்பூர்வமாகவும், தார்மிக ரீதியகாவும் நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். பின்தங்கிய சமூகத்தாரின் பொருளாதார அரசியல் நிலையை சீர்படுத்தி சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக கொண்டுவர முயற்சிப்பது கடினமான வேலை. ஆனால், இது மட்டும் போதுமானதல்ல. ஏனெனில், இவ்வகையான ‘சமத்துவத்தில்’ தனிப்பட்டவர்கள் என்ற எண்ணம் இருக்கும். எனவே, பொருளாதார, அரசியல் சமத்துவத்தால் காரியம் கைகூடாது. உண்மையான மாறுதலையும், முழுமையான ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த வேண்டும். இந்த மாறுதல் அரசாங்கம், அரசியல் கட்சிகள் ஆகியவற்றால் முடியாதது. ஒருமைப்பாடு – என்ற பெயரில் ஒட்டுப்போடும் சித்துவேலை காட்டுகின்ற அரசியல்கட்சிகளினால் செய்ய இயலாது. மனப்பூர்வமாக வேலை செய்வதும், தார்மீக ஆன்மீக நிலையிலும் இச்செயலை விரிவுபடுத்தி வருவது இன்றியமையாதது. மாநாட்டிற்கு வருகைதந்தவர்கள், ஆதரவு கொடுத்தவர்கள், உதவிசெய்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோளோடு தோள்கொடுத்து, இந்த பழமையான தீய வழக்கத்தை வலிமையான ஒரே அடியால் ஒழித்துக் கட்டுங்கள்”,
“இன்னொரு முக்கிய வேலை நமது சமுதாயத்திற்கு சமயத்தின் தத்துவங்களை போதிப்பது. இதில் பொதுவான சமயங்களின் தத்துவம், எல்லாவற்றையும் உள்ளடக்கிய சமய தத்துவம், அவர்கள் பிறந்த சம்பிரதாயத்தின் தத்துவம் ஆகியவையெல்லாம் அடங்கும். இந்த கல்வியை நாமே தொடங்குவது அவசியமாகும். ஏனெனில், தானும் கற்று, கற்றதை வாழ்க்கையில் கடைபிடிக்கிறவன் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பரிபூரண பக்தி, தூய நடத்தை, தூய பேச்சு, தூய எண்ணம் மற்றும் வேலை ஆகியவைகளே ஒருவனுக்கு, மற்றொருவனுக்கு போதிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. எனவே, நம்மிடத்தில் மேற்கூறிய பண்புகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொள்வோம்.”
“நாம் இதை போதிப்பதற்கு நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் செல்லவேண்டும். வெகு தொலைவிலுள்ள கிராமங்களுக்கும், மலைகளுக்கும், அடர்ந்த காடுகளுக்கும், எங்கு மக்கள் மூடநம்பிக்கை ஒன்றையே சமயமாக நினைக்கின்றார்களோ அங்கும், எங்கு சமயத்தை கற்று அதன்வழி நடக்க வாய்ப்பில்லையோ அங்கெல்லாம் செல்வோம். நாம் இப்பணி புரிகையில், அளவில்லாத இன்னல்களையும், நெருக்கடிகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு யாரும் நன்றிகூட சொல்ல மாட்டார்கள். ஆயினும், ஆச்சரியகரமான செயல் அல்லது நொடியில் மாற்றம் உண்டாகும் என்று நாம் எதிர்பார்க்கவே கூடாது. இன்னல்களை ஏற்றபடி உயர்ந்த விரதம் பூண்ட ஒரு கர்மயோகியைப் போல் முன்னே செல்வோம்”.
”எல்லா குறைகளுக்கும் பிறரை சுட்டிக் காட்டுவதில் சில கார்யகர்த்தாக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். சிலர் அரசியலில் உள்ள விகாரங்களை குற்றம் சொல்கின்றனர். சிலர் கிறிஸ்தவம், இஸ்லாம் அந்நிய ஆதிக்க சம்பிரதாயங்களை குறை கூறுகின்றனர். நமது கார்யகர்த்தாகள் இத்தகைய முன் முடிவு சார்ந்த எண்ணங்களிலிருந்து விடுபட்டு, நமது மக்களுக்காக, நமது மதத்திற்காக நேர்மையான உள்ளத்துடன் செயல்படவேண்டும். உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி புரிந்து, அவர்களின் துயரத்தை நீக்கவேண்டும். இத்தகைய தொண்டுகளில் எவரும் பாகுபாடு பார்க்கக்கூடாது. நாம் அனைவருக்கும் தொண்டு செய்வோம், உதவி புரிவோம். அவர்கள் கிறித்தவர்களாகட்டும் முஸ்லீம்களாகட்டும் அல்லது வேறு எந்த சமயத்தை சேர்ந்தவர்களாகட்டும். ஏனெனில், இன்னல்கள் அனைவருக்கும் ஏற்படுகின்றன. துன்புறுபவனுக்கு ஆறுதலளிப்பதற் காகவோ அல்லது அனுதாபத்தின் அடிப்படையிலோ உதவி புரிதல் கூடாது. எங்கும், அனைத்து ஆன்மாக்களிடத்திலும் நீக்கமற நிறைந்த இறைவனுக்கு தொண்டு புரிவதாக எண்ணி உதவிபுரிதல் வேண்டும். அனைத்தையும் அந்த உயர்ந்த தொண்டுக்கு அர்ப்பணித்தல் வேண்டும்; அனைவரும் நமது தாய், தந்தை, உறவினர் நண்பர்கள் எல்லாம். இதுவே நமது சமயத்தின் உண்மையான உணர்வாகும்”
”நமது இத்தகைய சேவை பணிகள், நமது ஸனாதன தர்மத்தின் அனைத்து மகிமைகளையும், பெருமைகளையும் உலகம் முழுதும் பரப்பட்டும்”,
மா. ஸ. கோல்வல்கர்
மகர ஸங்க்ராந்தி, சக 1898
தேதி 14.1.1970
திரு. ரமேஷ் பதங்கே …
மும்பை புறநகர் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மும்பை பல்கலைகழகத்தில் பொருளாதாரம், அரசியல் துறைகளில் எம்.ஏ பட்டம் பெற்றவர்.
சிறுவயதிலிருந்து அவர் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர் ஆர்.எஸ்.எஸ்ஸில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் 1981-1986 வரை மும்பை மாநகரின் இணைச் செயலாளராகவும் இருந்தார். நெருக்கடி நிலையை (எமர்ஜென்சி) எதிர்த்து போராடி சிறை சென்றவர். 1985லிருந்து ஸ்ரீகுருஜியின் கணவான சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ‘சாமாஜிக் சமரஸதா மஞ்ச்’ன் மகாராஷ்ட்ர மாநிலச் செயலாளராக செயல்படுகிறார்.
“சமரஸதா மஞ்ச் பத்ரிகா’ மற்றும் ‘விவேக்’ மராட்டி வார இதழின் ஆசிரியரான இவர் ‘மனுவாதமும் ஆர்.எஸ்.எஸ்ஸும்’ என்ற நூல் வாயிலாக தமிழ்வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.