Know us

அறிமுகம்

நாம் பிறந்த இந்தப் புண்ணிய பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். சமயத் துறையில் தலைவர்களாக விளங்கிய இவர்கள், மக்களுக்கு அருள்வழியைக் காட்டியிருக்கிறார்கள்.

அது போலவே சமுதாயத் துறையில் கணக்கற்ற பெரியோர்களை நம் பாரத பூமி காலமெல்லாம் தோற்றுவித்திருக்கிறது. சமுதாயத் தலைவர்களாக விளங்கிய இவர்கள், எத்தனை எத்தனையோ துறைகளில் நம் பாரத சமுதாயத்தின் நலனுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அரும்பணி ஆற்றியுள்ளனர்.

சமயத் தலைவர்களாக இந்தியாவில் எவ்வளவோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். சமுதாயத் தலைவர்களாகவும் இந்தியாவில் எவ்வளவோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள்.

சமயத் தலைவராகவும் அதே சமயத்தில் சமுதாயத் தலைவராகவும் வாழ்ந்து, மக்களுக்கு வழி காட்டியவர்களும் இந்தப் பாரதப் புண்ணிய பூமியில் உண்டு. இந்த வரிசையில் சமீப காலத்தில் தோன்றிய மாமனிதர் சுவாமி விவேகானந்தர்.

இன்று நம் பாரதம் ஒரு சுதந்திர பூமி. இந்தச் சுதந்திர பூமியை உருவாக்குவதற்குப் போற்றுதலுக்குரிய நம் தேசபக்தர்களும் தேசியத் தலைவர்களும் எல்லையற்ற துன்பங்களையும் தியாகங்களையும் மேற்கொண்டனர். அவர்களை நாம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவைக் தட்டியெழுப்பி, வீறுகொண்டெழச் செய்தார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் வீரமுழக்கம்தான், அவரது அறைகூவல்தான் இந்திய மக்களைச் சிலிர்த்தெழுந்து சுதந்திரப் போராட்டத்தில் அன்று ஈடுபட வைத்தது.

எனவேதான் மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றிச் சொல்லும்போது, விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே இந்தியா விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும் என்று குறிப்பிட்டார்.

சுவாமி அகண்டானந்தர் விவேகானந்தரின் தேசபக்தியை வர்ணிக்கும்போது:-

” ….சுவாமிஜி பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேசபக்தி (patriostism) அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்மா போதம்”, அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமி விவேகானந்தருக்கு  இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது. நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர்காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.

நாட்டிற்கு ஒரு புதிய இந்தியாவின் காட்சியை அளித்த முன்னோடிகளில் முதல்வராகத் திகழ்கிறார் சுவாமி விவேகானந்தர். சுதந்திரமான, புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட, புதுமைப் பொலிவு பெற்ற, புராதனப் பெருமை மீட்கப்பட்ட ஓர் இந்தியாவின் காட்சியை அவர் நமக்குத் தந்துள்ளார். அவர் தமது காட்சியை உணர்ச்சிப் பெருக்குடன் இவ்வாறு விவரிக்கிறார்:

‘இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் அத்தகைய இந்தியா உருவகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை… அவ்வளவுதான், எழுந்துருங்கள், விழித்திருங்கள். அழியாத தன் அரியாசனத்தில் புத்திளமையோடும் முன்பு எப்போதும் இல்லாத பெருமையோடும் அவள் வீற்றிருப்பதைக் காணுங்கள்.’

எதிர்கால இந்தியா முன்பு எப்போதும் இருந்ததை விடவும் மிகுந்த சிறப்போடும் பெருமையோடும் விளங்கப் போகிறது என்று சுவாமி விவேகானந்தர் தீர்க்க தரிசனமாகக் தெரிவித்திருக்கிறார். அவர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் நமது புராதான பெருமைகளை கொண்ட நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும். மீண்டும் பாரதம் உலகின் குருவாய் அமைந்திட வேண்டும். என்கிற நோக்கத்தில் பணிபுரிகிறதுஅமர பாரதம்  இணையதளம்.


புதிய பாரதம் தலையெடுக்க, தேசத் தொண்டில் ஈடுபடும்படி நம்மையெல்லாம் இன்றும் அழைத்தபடியே இருக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அவரது சில கருத்துக்கள்:

பாரத மாதாவின் நன்மைக்காக அவளுடைய மிகவும் சிறந்த, மிகவும் உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக்கிறது என்பதை நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன். பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும்.

தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும், தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையில் உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

எனது வீர இளைஞர்களே! செயலில் ஈடுபடத் தொடங்குங்கள். தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

நமது தாய்நாட்டின் இளைஞர்களே! ஆக்கப்பூர்வமான நற்பணிகளில் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக முழு மனதுடன் ஈடுபடுங்கள்.

நம்புங்கள்! உறுதியாக நம்புங்கள்! இந்தியா கண்விழித்து எழுந்திருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை பிறந்துவிட்டது. இந்தியா எழுச்சி பெற்று முன்னேற்றப் பாதையில்தான் செல்ல வேண்டும் என்று இறைவன் ஆணை பிறப்பித்தாகிவிட்டது.

இப்போதிருக்கும் இந்தக் குழப்பத்திலிருந்தும், போராட்டத்திலிருந்தும் மகிமை பொருந்திய பரிபூரண எதிர்கால இந்தியா கிளம்பி எழுவதை நான் என் மனக்கண்ணால் பார்க்கிறேன். அது எவராலும் வெல்ல முடியாததாகக் கிளம்பி எழும்புவதை நான் என் மனக்கண்ணால் பார்க்கிறேன்.

என் சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது.

புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்த பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.

கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும்! மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்தும் புதிய இந்தியா எழட்டும்! பலசரக்குக் கடைகள், பலகாரக் கடைகளிலிருந்து அவள் தோன்றட்டும்! தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தைகள் ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்திய எழுந்து வெளிவரட்டும்!