படிப்போம்! பகிர்வோம்! – சிரமங்கள் சிறகுகள்

சிரமங்கள் சிறகுகள்shutterstock_77783278-1000x641

மலையுச்சிக்குத் தாவித் தாவிச்
சென்றான் தலைவன்!
மலையைச் சறுக்குமரம் போலாக்கி
ஏறினான் தொண்டன்.
‘உச்சிக்கு வா’ – தலைவன்
‘மாட்டேன், கீழே விழுந்துடுவேன்’ – தொண்டன்
‘வா மகனே’
‘இல்லை, செத்துவிடுவேன்’
‘நான் இருக்கிறேன் வா’
தொண்டன் வந்தான் உச்சிக்கு!
உன்னத அழகு உச்சியில்.
‘இதை என்றும் அனுபவிக்க ஆவலா?’
‘ஆம் தலைவா!’
தொண்டனைத் தள்ளிவிட்டான் தலைவன்!
ஆ! விழுந்தவன் பறந்தான்!
சிரமங்கள் வந்தபோதுதான்
சிறகுகள் இருப்பதை உணர்ந்தான்!

– பாமதி மைந்தன்.

படிப்போம்! பகிர்வோம்! – இந்தியா ஒரே நாடு

படிப்போம்! பகிர்வோம்!

இந்தியா ஒரே நாடு

இந்தியா
ஒரே நாடு அல்ல
பல நாடுகளின்
கூட்டமைப்பு ..என்று

ஒரு சில பிரிவினைவாதிகளின்
குரல்
யாரும்
கண்டு கொள்ளாத போதும்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது !👺

ஒற்றை நாய் 🐶
குரைக்கும் போதே
விரட்டா விட்டால்
ஊரு நாய்களெல்லாம்
ஒன்று சேர்ந்து
ஊளையிடும்
அபாயம் நேரலாம் !

எனவே
தெளிவு படுத்தும் கடமை
தேச பக்தனின்
தோள்களில் !👨‍🌾

🏔மலையையும்
கடலையும்🏖
காரணமாக்கிக்
காலம் படைத்த
தீப கற்பம் இது !🙏

இந்த கற்பத்தில்தான்
உலகின் ஆன்மீகக் குழந்தை👶🏻
அவதரித்தது !

ஆதியில்
இதனை
நாவலந் தீவென்றே
நானிலம் அறியும் !

துணைக் கண்டம்
என்று
புவியியலார்
புகழ்வதுண்டு !

தென்னாடுடைய சிவன்
இமயத்திலும்🏔
இமவான் மகள்
குமரியிலும்
இடம் மாறி இருந்து
எல்லை வகுத்தனர் !

கயிலைப் பெருமான்
கல்யாணம் செய்தது
மதுரைப் பாண்டியன்
மகளை அல்லவா?

இதிகாசங்கள் இரண்டும்
பேசாத
இடங்களே இல்லை
இந்தியாவில் !

வடபுலத்து இராமன்
தென்கோடியில்
கட்டிய கோயில்
இராமேஸ்வரம் !

காந்தாரச் சகுனி முதல்
கடலோரப் பாண்டியன் வரை
பங்கெடுக்காதவர் யார்?
பாரதப் போரில் !

கங்கை நீரையும்
கயிலைக் கல்லையும்
கொண்டு வந்து தான்
பத்தினிக் கோட்டத்தைக்
கட்டி முடித்தான்
செங்குட்டுவன் !

ஆதி முதல்
தீர்த்த யாத்திரை
காசி – இராமேஸ்வரம்
என்பதாய்த் தானே
காணப்படுகிறது !

கயிலையில் புறப்பட்ட
அகத்தியருக்குத் தெரியும்
பாரத எல்லை
நெல்லைக்கு அப்பால்
இல்லை என்று !

அதனால்தான் பொதிகையைத் தாண்டி
போகவில்லை அவர் !

வடக்கே அவதரித்த
பரசுராமர்
அந்திமத்தில்
அமைதி கொண்டது
தென்னகத்துக் கேரளம் !

பாரதம் முழுவதையும்
பாதத்தால் அளந்த
கேரளத்துச் சங்கரர்
பீடம் ஏறியது
காஞ்சி நகர் !

கயிலை முனிவரே
மூலனாய் மாறி
மூவாயிரம் பாடலில்
திருமந்திரத்தைத்
திரட்டிக் கொடுத்தார் !

வடகயிலை
சுந்தரர்தான்
தென்னகத்தில்
தமிழ் வளர்த்தார் !

காரைக்கால் அம்மையும்
கரசேவை அப்பரும்
வடகயிலை சென்று
தென்தமிழில் பாடினர் !

கேரளத்துச் சேரலன்
கவிதைத் தொகுதியை
வெளியிட்ட இடம்
வடகயிலை என்பது
வருணன் தரும் செய்தி !

மெய்கண்டாருக்குச்
சித்தாந்தம் சொன்னவர்
வடகயிலை பரஞ்சோதி
என்பதே வரலாறு !

காசி மடத்தைக்
கட்டி ஆண்டவர்
கன்னித் தமிழ் நாட்டுக்
குமரகுருபரர் !

ஆண்டாள் மாலை
அழகு செய்யாமல்
திருப்பதியில்
திருவிழா ஏது ?

விவேகானந்தரின்
வேதாந்த அறிவு
அமெரிக்காவை
ஆட்டிப் படைத்தது
சேதுபதியின்
செலவில்தானே !

வடக்கே பிறந்து
தெற்கே புகுந்து
புதுவை மண்ணை
புனிமாக்கினார்
அரவிந்தர் !

ஆந்திராவின்
அற்புதமானார்
தமிழகம் தந்த
இராகவேந்தர் !

ஒருங்குடன் ஆண்ட
பரதன் பெயரால்
பாரதம் என்பதே
பழம் பெயராகும் !

இந்திய எல்லையை
எடுத்துக் காட்டும்
சங்க இலக்கியச்
சான்றுகள் பற்பல !

இட்டப் பொட்டும்
கட்டிய புடவையும்
இந்தியப் பெண் என
எடுத்துக் காட்டும் !

இந்தியா முழுவதும்
எல்லா வீட்டிலும்
யாராவது ஒருவருக்கு
வடமொழிப் பெயராய் !

பாரத தேசம்
பழம் பெரும் தேசமாம்
பாரதி புலவனும்
பாடி மகிழ்ந்தான் !

வடக்கே இருக்கும்
திரிவேணி சங்கமம்
தெற்கே வந்தால்
முக்கூடலாகும் !

எடுத்துக் காட்டுகளை
அடுக்கத் தொடங்கினால்
முடிவாய்ச் சொல்ல
முந்நூறு நாட்கள்
முழுமையாய்த் தேவை !

பெரிய தேசத்தில்
வேறுபாடுகள்
இருப்பதே இயற்கை !
வேறுபாடுகளைக்
கூறுபடுத்தி
பிரிவினைப் பேசும்
பித்தர்கள் எத்தர்களாய்!
விரல்களின் அளவு
வெவ்வேறாயினும்
உள்ளங்கை
ஒன்றுதான் ✋ என்பதை
உணர மறுக்கும்
குருடர்களுக்கு
விளக்கினாலும் விளங்காது !

சோழநாடு
சேரநாடு
பாண்டியநாடு
கொங்குநாடு
நடுநாடு
ஆப்ப நாடு
என்றெல்லாம்
பிரிந்து கிடந்த
தமிழ்நாடு
ஒரே மாநிலமாய்
உருப்பெற்றதற்குத்
தமிழ் மொழியே
அடிப்படை !

பல மாநிலங்களையும்
சேர்த்து
பாரத நாடென
பறை சாற்றுவதற்கு
ஆன்மீகப் பண்பாடே
அடிப்படை !

அழகான மாலையில்
பல பூக்கள்🌼🌸🌹🌺 இருப்பதால்
அது
மாலையே இல்லை
தனித்தனிப் பூக்கள் தான்
என்று
அடம்பிடிப்போரிடம்
அகப்பட்டு விடாதீர் !

பிரிவினை நோய்
பிடித்துக் கொள்ளும் !!!

நாம் இந்தியர் என்பதில்
பெருமிதம் கொள்வோம்!🇮🇳
இணைந்தே இன்னும் பல
சாதனைகள் புரிவோம்!

வாழ்க பாரதம்!🇮🇳
வந்தே மாதரம்!👳‍♀👳‍♂👲
ஜெய்ஹிந்த்!🇮🇳