எதிர்ப்புகளுக்கிடையேயும் வளர்ச்சி
இயற்கையாக உங்கள் மனதில் எழக்கூடிய இன்னொரு கேள்வி: சங்கத்தின் சிந்தனைகள் – செயல்களை யாருமே எதிர்க்கவில்லையா?
உண்மையில் சங்கம் பிறந்தது முதலே பலவகையான பொய்ப் பிரச்சாரங்களுக்கும், பயங்கர எதிர்ப்புகளுக்கும் இலக்காகி வந்துள்ளது. டாக்டர்ஜி எத்தனை தீவிரமான தேசபக்தர் என்பதை இக்கதையின் தொடக்கத்திலேயே உங்களுக்குக் கூறியிருக்கிறேன் அல்லவா?
எனவே அச்சமயத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கழுகுப் பார்வை எப்போதும் சங்கத்தின் மீதே இருந்தது. மூன்றுமுறை சங்கத்துக்கு தடை விதிக்கவும் ஆங்கிலேய அரசு முயற்சி செய்தது. ஆனால் டாக்டர்ஜி மற்றும் ஸ்ரீ குருஜியின் திறமையினாலும், மக்கள் ஆதரவினாலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன.
பாரதம் விடுதலை அடைந்த பின்பும் எதிர்ப்புகள் குறையவில்லை. 1948-இல் காந்திஜி கொலை செய்யப்பட்ட பிறகும், 1975-77இல் நெருக்கடிக் காலத்திலும் தடை விதிக்கப்பட்டது. அண்மையில் 1992-இல் அயோத்தி கரசேவைக்குப் பிறகும் கூட, தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அரசே நிபந்தனையின்றித் தடையை விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. (1992ன் தடை, நீதிமன்றத் தீர்ப்பின்படி விலகியது) ஒவ்வொரு முறையும் சங்கம் புடம் போட்ட தங்கம்போல அதிக ஒளியுடன், வலிமையுடன், மக்களின் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
தடை விதித்தவர்கள் யார்?
சங்கத்துக்கெதிராக இப்போதும் இடைவிடாது பொய் பிரச்சாரத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஷாகாக்களின் விஸ்தரிப்புடன் கூட தேசிய வாழ்வின் – அரசியல் உள்ளிட்ட – அனைத்துத் துறைகளிலும் சங்கத்தின் செல்வாக்கு வளர்ந்துள்ளதையடுத்து, சங்கத்தைப் பற்றிப் பல விதமான எதிர்ப்புப் பிரச்சாரங்களும் வளர்வது இயற்கையே. ஆனால், சங்கம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள அமைப்புகளின் மீது பழி சுமத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
உங்களுக்கும் இந்த விஷயம் விளங்கியிருக்கும் – இவர்கள் சில அரசியல் மற்றும் மதத் தலைவர்களும், குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகள், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவப் பாதிரிகளும்தான். ஹிட்லரிடம், கோயபெல்ஸ் என்ற பிரச்சார மந்திரி ஒருவன் இருந்தான். அவன் ‘பொய்யையே நூறு முறை திரும்பத் திரும்பக் கூறினால் அது மெய்போலத் தோன்றத் தொடங்கிவிடும்’ என்பான். இந்தக் குற்றம் சாட்டுபவர்கள் எல்லாம் அவனது நேர் சீடர்கள் போலும்!
காந்திஜி கொலை தொடர்பான பழி ஆதாரமற்றது
உதாரணமாகப் பாருங்கள்…. காந்திஜியைக் கொன்றது சங்கம்தான் என்ற குற்றச்சாட்டு குறித்து 27.2.1948-இல் நேருவுக்கு சர்தார் படேல் கடிதம் எழுதினார். ‘காந்திஜியின் கொலையில் சங்கத்தின் உறுப்பினர் எவருக்கும் தொடர்பில்லை’ என்பதை அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். பிறகு நீதிபதி ஆத்ம சரணின் தனி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சங்கத்தின் பெயரோ எந்தவொரு ஸ்வயம்சேவகரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. அதன்பிறகு, 1965-இல் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட கபூர் கமிஷனின் அறிக்கையும் சங்கத்தை நிரபராதி என்றே கூறியது. 1977-இல் அன்றைய பிரதமர் ஸ்ரீ மொரார்ஜி தேசாய் நாடாளுமன்றத்தில் இதே விஷயத்தை கூறினார்.
உண்மை இப்படி இருக்க, காந்தி கொலைப் பழியை சங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் சுமத்திவருபவர்கள் கோயபெல்சின் சீடர்களா இல்லையா, நீங்களே சொல்லுங்கள்.
சங்கம் மதவாத அமைப்பு; முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது என்பதும் இதேபோன்று மற்றொரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. இதுவரை நாடெங்கிலும் எத்தனையோ மதக்கலவரங்கள் நடந்துள்ளன. அவை தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஒவ்வொன்றுமே சங்கத்தை நிரபராதி என்றே நிறுவியுள்ளன. கன்னியாகுமரி – மண்டைக்காடு கலவரம் பற்றி நீதிபதி வேணுகோபால் கமிஷன் கூறியுள்ளது என்ன? “கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகளுக்கு ஹிந்துக்களின் பதிலடிதான் அது; மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும்” என்றுதான் அந்தக் கமிஷன் அரசுக்கு அறிவுறுத்தியது.
பிரமுகர்களின் கருத்து என்ன?
டாக்டர் ஜாகிர் ஹுசைன் (பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்) 1949 நவம்பர் 20 அன்று பீகாரில் நடந்த மிலாது விழாவில்: “சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர், அவர்களைத் தாக்குகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. சங்கத்திடமிருந்து பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைக்கும் திறமை இவற்றை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டும்”.
ஸ்ரீ கோகா சுப்பாராவ்ஜி பாரதத்தின் முன்னாள் தலைமை நீதிபதி – பெங்களூரில் 25 ஆகஸ்டு 1968-ல் சங்க குருதக்ஷிணா விழாவில்) “ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதில் ஒரு வலிமை வாய்ந்த கருவியாக வளரும். சங்கம் மதசார்பின்மைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறது என விமர்சிப்பது முற்றிலும் அபத்தமானது”.
இருப்பினும் சில அரசியல்வாதிகள் சங்கத்தை மதசார்பின்மைக்கு விரோதி என ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்? இதற்குக் காரணம் மிக எளிது. ஹிந்துக்கள் இப்போது விழிப்படைந்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு வகையிலும் தங்களைப் புறக்கணிப்பதையும் கிண்டல் செய்வதையும் கண்டு ஹிந்துக்களது மனதில் கோபம் எழுகிறது. ஹிந்துக்களல்லாதவர்களின் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு ஹிந்துக்களை விட அவர்களுக்கு மிக அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி வரும் அந்த அரசியல்வாதிகளின் தேர்தல் விளையாட்டுக்களும், ஹிந்துக்களின் கவனத்துக்கு வருகின்றன. அவர்களுக்கெதிராக தேர்தல் பாஷையில் எதிர்ப்பையும் ஹிந்துக்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களது உண்மையான முகத்தை ஹிந்துக்கள் இனங்கண்டு கொண்டு விட்டனர்.
சங்கம் வேறு, அரசியல் பணி வேறு
சிலர் சங்கம் மற்றும் பா.ஜ.கவின் பரஸ்பர உறவு பற்றியும் விதவிதமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர். இக்கதையின் தொடக்கத்திலேயே கூறியுள்ளேன், ஸ்வயம் சேவகர்கள் தேசிய வாழ்வின் எல்லாத் துறைகளிலும் ஹிந்துத்வக் கருத்தினைக் கொண்டு சென்று சங்கத்தில் பெற்ற பண்புப்பதிவுகளைக் கொண்டு அந்தத் துறைகளில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றனர். அவைகளில் அரசியல்துறையும் ஒன்று. அந்த அமைப்புக்கள் அனைத்துக்கு மிடையில் உள்ள ஒரே உறவு, அனைவரும் ஸ்வயம் சேவகர்கள் என்பதே. பல்வேறு துறைகளில் நடைபெற்றுவரும் அமைப்புகளைப் போன்றே பா.ஜ.கவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆட்சி நடக்கும் மத்தியிலோ, மாநிலங்களிலோ கொள்கை வகுப்பதில் சங்கத்தின் தலையீடு ஏதுமில்லை.
இப்படிப்பட்ட எதிர்ப்புக்கள் அனைத்துக்கும் ஒரே காரணம் சங்கத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கால் அவர்கள் மனத்தில் தோன்றியுள்ள அச்சமே. சுவாமி விவேகானந்தரின் இந்தக் கருத்துரை ஸ்வயம்சேவகர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்: “ஒவ்வொரு அரும்பணியும் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது – புறக்கணிப்பு, கேலி, எதிர்ப்பு, இறுதியில் வெற்றி” எனவே இறுதி வெற்றியில் தளராத நம்பிக்கை கொண்டு, ஸ்வயம் சேவகர்கள் செயலில் இறங்கியுள்ளனர்.
ஹிந்து என்ற முறையில் உங்களிடம் அன்பான வேண்டுகோள்
மிகச் சுருக்கமாக சங்கத்தின் கதையை இதுவரை கூறினேன். இதைக் கேட்ட பிறகு உங்களுக்கு நிச்சயமாகத் தோன்றக்கூடிய கருத்து – சங்கப்பணி விரைவாக முன்னேறாவிட்டால் நாட்டுக்கு இன்னும் பல கோரமான பேரழிவுகள் ஏற்படலாம். எனவே இப்பணியை விரைவாக முன்னேற்ற வேண்டி உங்களைப் போன்ற, புதிய புதிய பல்லாயிரம் பேர் இப்புனிதப் பணியில் தோள்கொடுக்க வேண்டியிருக்கும். எனவே இயன்ற வரையில் – ராமாயண அணிலைப் போல – நமது ஹிந்து தேசத்துக்காக நேரம் கொடுப்பது ஒவ்வொரு ஹிந்துவின் முதல் கடமை என்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். எனவே, இப்போது நீங்கள் இக்கதையைப் படிப்பவராகவும் கேட்பவராகவும் மட்டும் இருந்து விடாமல், இக்கதை, தொடரச் செய்வதில் பங்கெடுத்துக் கொள்ள ‘நான் தகுதியுள்ளவன் என உணர்ந்து செயல்படுங்கள்; சங்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்’ என ஓர் ஹிந்து சகோதரன் என்ற முறையில் நான் உங்களிடம் அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.
கங்கா மாதா போன்றது இந்தக் கதை
நீங்களும், நாங்களும், அனைவரும் பங்கு கொள்ளும் கதை இது. நாமனைவரும் சேர்ந்து உருவாகும் சமுதாயம் புத்தெழுச்சி பெற்றுயர மேற்கொள்ளும் மாபெரும் முயற்சிகளின் கதை இது. அதாவது நமது ஹிந்து சமுதாயத்தை விழிப்படையச் செய்து ஒருங்கிணைத்து நமது அன்புக்குரிய தாய்நாடாகிய பாரதமாதாவை சிறப்பின் மிக உயர்ந்த சிகரத்தில் ஏற்றும் வகையில் மெல்ல மெல்ல முன்னேற்றுவதுதான் இந்தக் கதை.
1925-இல் டாக்டர் ஹெட்கேவார் கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கனவின் நடைமுறைச் செயல்வடிவத்தின் கதை இது. எல்லா கதைகளுக்கும் முடிவு ஏதாவதொரு கட்டத்தில் உண்டு. ஆனால் இது ஒரு தொடர் கதை.
இந்தப் புனித நீரோட்டம், கடல் போன்ற ஹிந்து சமுதாயத்தைத் தனது மடியில் உட்காரவைத்துக் கொண்டு, அதனை மிகத் தூய்மையாகவும், ஒளி பொருந்தியதாகவும், வெற்றித்திருவுடையதாகவும் செய்து கொண்டு, உலகமனைத்தையும் சுகமளித்து வாழ வைப்பதாக ஆக்கிக் கொண்டு, வாழையடி வாழையாக முன்னேறிக் கொண்டிருக்கும்.